அடிக்கிற வெயிலுக்கு ஏரி, குளம்தான் வற்றும்...ஏடிஎம் கூடவா வற்றிப்போகும்?
போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இருப்பில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் களில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மீண்டும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை வருமோ என்று மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சித்திரை மாதம் அடிக்கிற கத்திரி வெயிலுக்கு ஊர்ல இருக்கிற ஏரி, குளம் ஏன் பெரிய பெரிய அணைகள் கூட தண்ணீர் இன்றி வற்றி வறண்டு வருகின்றன. கார்டை நுழைத்தால் பணம் கொடுக்கும் ஏடிஎம்மில் கூட இப்போது வறட்சி நிலவுதே ஏன் என்றுதான் மக்கள் மத்தியில் இப்போது எழும் கேள்வி.
கறுப்புப் பணப் புழக்கத்தை அறவே ஒழிக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக 2000 நோட்டுக்களும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய வடிவில் 500 ரூபாய் நோட்டுக்களும் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.
நீண்ட வரிசையில் மக்கள்
முதலில் குறைந்த அளவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன. இதனால், பொது மக்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நிற்பது போல வங்கிக் கிளைகளிலும், ஏடிஎம் வாசலிலும் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நின்று பணத்தை பெற்றுச் சென்றனர்.
புதிய ரூபாய் நோட்டுக்கள்
பொதுமக்களின் சிரமங்களை நேரடியாக புரிந்துகொண்ட உச்சநீதமன்றமும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு நடடிக்கை எடுக்க வலியுறுத்தியது. மத்திய அரசும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அதிக அளவில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விட்டன. கூடவே குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அறிவித்தது.
புழக்கத்தில் புதிய நோட்டுக்கள்
மத்திய அரசு அறிவித்தது போலவே, கடந்த ஆகஸ்டு மாதத்தில் புதிதாக 200 ரூபாய் நோட்டுக்களும், செப்டம்பர் மாதத்தில் புதிய வடிவில் 50 ரூபாய் நோட்டுக்களும் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பொது மக்கள் சிரமப்பட்டாலும் பின்னர் படிப்படியாக குறைந்த மதிப்புடைய 200 மற்றும் 50 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுக்களும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.
மார்ச் வரை மட்டுமே
இதனை அடுத்து நிலைமை சீரடைந்து சகஜ நிலை திரும்பியது. அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் குறைந்த மதிப்புடைய நோட்டுக்களைத் தவிர்த்து 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலும் தாராளமாக கிடைத்து பணப் புழக்கமும் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், இந்த நிலை கடந்த மார்ச் மாதம் வரை மட்டுமே.
மூடப்பட்ட ஏடிஎம்கள்
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்டின் பெரும்பாலான வங்கி ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் மூடிக்கிடக்கின்றன. அதிலும் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியின் சில இடங்களிலும் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடிக்கிடக்கின்றன. அப்படியே ஏடிஎம் களில் பணம் இருந்தாலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
பீதியடையும் மக்கள்
நாட்டின் பெரும்பாலான ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க (Demonetization) நடவடிக்கை வருமோ என்று கவலைப்படத் ஆரம்பித்து விட்டனர். மத்திய அரசு ஒருவேளை 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமோ என்று பீதியடையத் தொடங்கி விட்டனர்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நிலைமையின் தீவிரத்தை கண்ட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தற்போது ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு தற்காலிகமானதே, தேவையான ரூபாய் நோட்டுக்கள் இருப்பு வைத்துள்ளதாகவும், இன்னும் ஒரிரு நாட்களில் அனைத்து ஏடிஎம்களிலும் போதுமான அளவிற்கு பணம் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளாது. ஐந்து மடங்கு புதியதாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவாக நடந்து வருவதாகவும், பொதுமக்கள் பணத் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் உறுதி அளித்துள்ளது. மத்திய நிதிச் சேவைத் துறையின் செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், நாட்டிலுள்ள மொத்த ஏடிஎம்களில் சுமார் 10 முதல் 12 சதவிகிதம் ஏடிஎம்கள், பணம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பப்படும், என்று உறுதியாகக் கூறினார்.
பணத்தட்டுப்பாடுக்கு காரணம்
பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், செய்தியாளர்களிடம் இது பற்றி கூறுகையில், பெருமளவில் பணத்தை பதுக்கி வைப்பதற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் உதவுவதால், பதுக்கல்காரர்கள் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் எடுக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பவும் புழக்கத்திற்கு விடுவதில்லை. இதுவும் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட காரணமாகும். ஆனாலும். இதனால் பெரிதாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்பவில்லை. கூடவே 6.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பட்டு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, என்று தெரிவித்தார்.
பணம் இருப்பில் உள்ளது
நாட்டின் சில பகுதிகளில் வேண்டுமானால் பதுக்கல் காரர்கள் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருப்பதால் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் பொதுமக்களும் பயந்துபோய் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துவருவதால் தட்டுப்பாடு அதிகரித்தது போல தோற்றமளிக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுக்கள் இருப்பு உள்ளதாகவும் எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்றும் கார்க் கூடுதல் தகவலை தெரிவித்தார்.
ரூ.75000 கோடி
பொருளாதார விவகாரத் துறை செயலாளர் கார்க் மேலும் கூறுகையில், மத்திய அரசு பணத் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக தற்சமயம் நாள் ஒன்றுக்கு 500 கோடிரூபாய் மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வருகிறது. இதனை நாள் ஒன்றுக்கு 2500 கோடி ரூபாய் அளவிற்கு அச்சடிக்கும் பணி முடுக்கி விடப்படும். இதனால் ஒரு மாதத்திற்கு சுமார் 70000 கோடி முதல் 75000 கோடி ரூபாய் அளவிற்கு 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மக்கள் பயம்
வங்கிகளின் வராக்கடன் பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் பயந்துபோய் தங்களின் பணத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதாக வெளிவரும் செய்திகளை சுட்டிக் காட்டி செய்தியாளர்கள் கேட்டபொழுது, அவை முற்றிலும் வதந்தி என்று கார்க் கடுமையாக மறுத்தார்.