ஏடிஎம்மில் நிரப்பப்படும் பணமெல்லாம் எங்கேதான் போகுது? திணறும் ரிசர்வ் வங்கி
புத்தம் புதிய நோட்டுக்களை ஏடிஎம்களில் நிரப்பினாலும் பதுக்கல்காரர்கள் தொடர்ந்து பணத்தை எடுத்து பதுக்குவது தொடர்வதால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
மும்பை: பொதுமக்களின் புழக்கத்திற்காக புத்தம் புதிய நோட்டுக்களை அச்சடித்து ஏடிஎம்களில் நிரப்பினாலும் பதுக்கல்காரர்கள் தொடர்ந்து பணத்தை எடுத்து பதுக்கவது தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது ரிசர்வ் வங்கியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கறுப்புப் பணத்தை பதுக்குவதற்கு உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வசதியாக இருந்ததால் அதனை முற்றிலும் ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த 2016 நவம்பர் மாதத்தில் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அதற்கு பதிலாக முற்றிலும் புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக முடிந்த கதையாக, தற்போது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் காரர்களுக்கு உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்கள் வசதியாக வாய்த்துவிட்டது என்ற சொல்லலாம்.
கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில், புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டு உட்பட, 500 ரூபாய் நோட்டுக்களும் சரிவர இருப்பு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பதுக்கப்படும் பணம்
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக வங்கிகளில் இருந்தும், ஏடிஎம்களில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டுக்களை எடுத்து பதுக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் பதுக்கிவைத்த தொடங்கி, கடந்த அக்டோபர் முதல் அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி தொடங்கிவிட்டனர்.
2000 ரூபாய் நோட்டு மாயம்
இதன்விளைவாக சாதாரண மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. அதுவும் கடந்த அக்டோபர் மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது எனலாம். கூடவே, வங்கிகளின் வராக்கடன் செய்திகளால், பீதியடைந்த பொதுமக்களும் தங்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பதுக்கி வைப்பதாலும், 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பணம் இல்லாத ஏடிஎம்கள்
தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அனைத்து வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் காலியாக இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, ரிசர்வ் வங்கியும் தொடர்ச்சியாக அச்சடித்து வங்கிகளுக்கும் ஏடிஎம்களுக்கும் சப்ளை செய்துவருகிறது.
16340 கோடி ரூபாய்
இருந்தாலும் பதுக்கல் காரர்கள் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை எடுத்து பதுக்கி வைப்பதாக ரிசர்வ் வங்கிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல், மேலும் மேலும் புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்திற்கு விடுகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 16340 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பணச்சுழற்சி
மேலும், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து முதல் மூன்று வாரத்தில் மட்டும் சுமார் 59520 கோடி ரூபாய் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வங்கிகளில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் எடுக்கப்பட்ட பணம் பொதுமக்களால் செலவழிக்கப்பட்டு மீண்டும் வங்கிகளுக்கு திரும்பி வர ஒரு சில மாத காலம் எடுத்துக்கொள்ளும். இதுதான் பணச் சுழற்சியின் அடிப்படையாகும்.
பதுக்கலுக்குக் காரணம்
கடந்த சில மாதங்களாக நிலைமை அப்படி இல்லை. வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வருவதாக தெரியவில்லை. இதனால், பதுக்கி வைத்துள்ள ருபாய் நோட்டுக்கள் பற்றிய புள்ளி விவரங்களை அறிந்துகொள்வது சிரமமாக உள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் பதுக்கி வைத்திருப்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
சட்டசபைத் தேர்தல்
வங்கிகளின் வராக்கடன் பீதி, கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் நடைபெறும், அறுவடை மற்றும் அடுத்த மாதம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக பணத்தை பதுக்கி வைப்பதும் இயல்பான ஒன்று என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
காலியாகும் ஏடிஎம்கள்
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டில் இதே கால கட்டத்தில் எடுக்கப்பட்ட அளவைவிட சுமார் 27 சதவிகிதம் கூடுதலாகும். ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி வரையிலும் சுமார் 18.9 கோடி ரூபாய் அளவிற்கு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலதாமதம் ஏன்?
பணத்தட்டுப்பாடு பற்றி ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கும்போது, அச்சடித்து இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது என்று தெரிவித்தது.