ஜிஎஸ்டியால் ஒரு குடும்ப செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது - மத்திய அரசு
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியக் குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.320 சேமிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிற
டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு 320 ரூபாய் மிச்சமாகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி சென்ற ஆண்டின் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்ற இலக்குடன் வரி மீது வரி விதிக்கும் முறையும் ஜிஎஸ்டியால் ஒழிக்கப்பட்டது.
கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட 17 வெவ்வேறு மத்திய மற்றும் மாநில வரிகளை ஒன்றிணைத்து ஜிஎஸ்டி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்ற இலக்குடன் வரி மீது வரி விதிக்கும் முறையும் ஜிஎஸ்டியால் ஒழிக்கப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளும் அவ்வப்போது குறைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டியால் குடும்பங்களின் செலவுகள் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் 320 ரூபாய் குறைந்துள்ளாம்.
வரிகள் குறைப்பு
மத்திய வர்த்தக அமைச்சகத்திடமிருந்து நுகர்வோர் செலவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உணவு, பானங்களுடன் பற்பசை, சோப், வாஷிங் பவுடர் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கான 83 பொருட்களின் வரிகள் குறைந்து அவற்றுக்கான செலவுகளும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மாத செலவில் மிச்சம்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாதத்துக்கு ரூ.8,400 செலவிடும் குடும்பம் ஒன்றுக்கு ரூ.320 மிச்சமாவதாக இந்த ஆய்வு கூறுகிறது. ரூ.8,400 செலவுக்கு வரியாக ரூ.510 செலுத்தப்படுகிறது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக இதற்கு வரியாக ரூ.830 செலவிடப்பட்டுள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, சாக்லேட், தின்பண்டங்கள், இனிப்பு, வாஷிங் பவுடர், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றுக்காக மாதம் ஒரு குடும்பம் 8,400 ரூபாய் செலவு செய்து வந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு மாதம் 320 ரூபாய் மிச்சம் ஆகிறதாம்.
வரி விலக்கு
ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி ஆட்சி முறையில் ஒரு பொருளை தயாரிக்கும் போது அதற்கு நிறுவனம் கலால் வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. இந்தக் கலால் வரியை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்தன. ஆனால் ஜிஎஸ்டி வரி முறையில் உற்பத்திக்குக் கலால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஜிஎஸ்டி வரி குறைவு
வாட் இருந்த போது கோதுமைக்கு 2.50 சதவீதமும், அரிசிக்கு 2.75 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஜிஎஸ்டியில் அரிசி மற்றும் கோதுமைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மசாலா பொருட்கள், கோதுமை, அரிசி, பாஸ்தா, இட்லி தோசை மாவு, மினரல் வாட்டர், தயிர், மோர் போன்ற பொருட்களுக்கு வாட் இருக்கும் போது இருந்ததைவிட ஜிஎஸ்டியில் வரி குறைவாக உள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி
பால் பவுடருக்கு இருந்து வந்த 6 சதவிகித வரி ஜிஎஸ்டியில் 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதே போன்று சர்க்கரை மீதான வரி 21 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சோப் பவுடர் மீதான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மரச் சாமானங்கள் மீதான குறைந்துள்ளது.
குறைந்த பணவீக்கம்
பல நாடுகளில் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் வாட் வரிக்கு இணையான விகிதங்களில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.