டுபாக்கூர் நிறுவனங்களின் வராக்கடன்: ரிசர்வ் வங்கியின் கழுகுப்பார்வையில் ஆடிட்டர்கள்
பொதுத்துறை வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கிய வராக்கடன்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால், இதற்கு காரணமான ஆடிட்டர்களை ரிசர்வ் வங்கி தன்னுடைய சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கிய வராக்கடன்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால், மத்திய ரிசர்வ் வங்கி இதற்கு காரணமான 30க்கும் மேற்பட்ட ஆடிட்டர்களை தன்னுடைய சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு நாளும், புதுப் படம் ரிலீசாவது போல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்ட செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சாதாரண நபர்களோ அல்லது விவசாயியோ கடன் கேட்டு வங்கிகளை அனுகினால், ஏதோ பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்த்துவிட்டு, அதற்கெல்லாம் உனக்கு தகுதியே கிடையாது என்று சொல்லி துரத்தி விடுவார்கள்.
கடன் தர மறுப்பு
கடன் வாங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் மிகச் சரியாக இருந்தாலும், ஏதாவது ஒரு நொட்டை காரணத்தை சொல்லி கடன் கிடையாது என்று துரத்தி விடுவதுண்டு. அப்படியே கடன் கொடுத்துவிட்டாலும், ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால், கடன் தவணையையோ அல்லது வட்டியையோ கட்டத் தவறினால், கடன் வாங்கியவர்களை அடிமை போல மிகக் கீழ்த்தரமாக நடத்துவதுண்டு.
ஸ்டைல் பார்ட்டிகள்
அடியாட்களைக் கொண்டு மிரட்டி கடனை வசூலிப்பதும் உண்டு. இப்படி மிகக் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதால் எத்தனையோ நபர்களும், விவசாயிகளும் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு.
மாறாக, கோட்சூட் போட்டுக்கொண்டு கண்ணுக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு, ஸ்டைலாக ஆங்கிலம் பேசிக்கொண்டு வங்கி மேலாளரை அனுகினால், அவர்களுக்கு உடனே கடன் கிடைத்துவிடுகின்றது.
மோசடி நிறுவனங்கள்
கடன் கேட்டு வரும் நிறுவனங்களைப் பற்றிய எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவிதமான உண்மையான ஆவணங்களும் இல்லாமல் கோடிகளில் கடன்களை அள்ளிவிடுவதுண்டு. மோசடி நிறுவனங்கள் தனியாக எந்த ஒரு வங்கியிடம் இருந்தும் கோடிகளில் கடன் வாங்க முடியாத காரியமாகும்.
மோசடி சொத்து மதிப்பு
இவர்களுக்கு திறமை வாய்ந்த ஆடிட்டர்களும் உறுதுணையாக இருந்துகொண்டு மோசடி நிறுவனங்களின் மிகக் குறைந்த மதிப்புடைய அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை உயர்த்திக் காட்டி, அதற்கான தக்க ஆதாரங்களையும் திரட்டி வங்கி அதிகாரிகளுக்கு எந்தவிதமான சந்தேகமும் எழாத வகையில் ஆவணங்களை தயார் செய்து கடன் வாங்கி கம்பி நீட்டி விடுவதுண்டு.
35 ஆடிட்டர்கள்
சில வங்கிகளின் உயர் அதிகாரிகளும் ஆடிட்டர்களுடன் சேர்ந்துகொண்டு, இந்த மோசடிகளுக்கு உறுதுணையாக இருந்துகொண்டு அவர்களுக்கு தேவையான கமிஷனை பெற்றுக்கொண்டு, மோசடி நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்குவதும் உண்டு. இப்படி மோசடி நிறுவனங்களுக்கு துணையாக இருந்துகொண்டு வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு காரணமாக இருந்த சுமார் 35க்கும் மேற்பட்ட ஆடிட்டர்களை மத்திய ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விளக்கம் கேட்ட ஆர்பிஐ
மோசடி நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு போலியாக ஆவணங்களை தயார்செய்து பல கோடிக்கணக்கில் கடன் பெறுவதற்கு துணைபோன ஆடிட்டர்களை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து, அவர்களைப் பற்றிய தகவல்களை தேசிய பட்டயக் கணக்காளர் அலுவலகத்திற்கு அனுப்பி, அவர்களிடம் போதிய விளக்கம் கேட்டுள்ளது. மோசடிக்கு துணைபோனது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படுவது உறுதி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.