வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக் - ஏடிஎம் சேவையும் பாதிக்கும் - பணத்தை பத்திரப்படுத்துங்க
நாடு முழுவதும், வரும் மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளதால் இரு நாட்களும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்களும் வருகிற 30, 31ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதால் வங்கி பணிகள் முடங்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.
வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5ம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்தன. வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் தவிர, வருவாய் அடிப்படையில் சம்பள உயர்வு விகிதம் நிர்ணயிக்க கூடாது என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.
இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, 3 மாதங்களாக வங்கி ஊழியர்கள், நாள் முழுவதும் உழைத்தனர். அரசின் உத்தரவுக்கு ஏற்ப 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கி, நலத்திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.ஆனால் எங்களுக்கு உரிய சம்பவளம் வழங்கப்படவில்லை. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டிய சம்பள உயர்வு நிலுவையில் உள்ளது. அரசு தர முன் வந்துள்ள சம்பள உயர்வை ஏற்க முடியாது’’ என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் தேவதாஸ் துல்புல்கர் கூறியுள்ளார்.
தற்போது வங்கிகள் அனைத்தும் நல்ல லாபம் ஈட்டுகின்றன. கடந்த 2012-ல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக இருந்த வாராக் கடன், 2017-18 நிதியாண்டில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிக்குக் கிடைக்கும் லாபம், வாராக்கடனால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வங்கிகள் நஷ்டம் அடைவதாகக் கூறி, அதன் காரணமாக ஊதிய உயர்வு அளிக்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது. இதைக் கண்டித்தே 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் வரும் மே 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களில் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும்.