இந்திய வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி - ரிசர்வ் வங்கி
இந்திய வங்கிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மக்களின் பணத்தை கடன் என்ற பெயரில் வாங்கி ஆட்டையை போட்டுள்ளனர் தொழில் அதிபர்கள். இது தொடர்பாக மொத்தம் 23,866 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் மல்லையாவில் தொடங்கிய இந்த மோசடி, நீரவ் மோடி, நாதெள்ளா, கனிஷ்கா வரை நீடிக்கிறது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12,00 கோடியை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகளில் நடந்துள்ள கடன் மோசடிகளின் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஒட்டுமொத்தமாக கடந்த 2013 முதல் 2018 மார்ச் 1 வரை மொத்தம் 23,866 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த காலகட்டத்தில் நடந்த வங்கி மோசடியின் மதிப்பு ரூ.1,00,718 கோடி ஆகும்.
- 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் 1 வரை 5,152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் நடந்த வங்கி மோசடியின் மதிப்பு ரூ. 28,459 கோடி ஆகும்.
- வங்கி மோசடிகள் தொடர்பாக கடந்த 2013-14 இல் 4,306 வழக்குகள் (மோசடியின் மதிப்பு ரூ.10,170 கோடி) பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இதேபோல், 2014-15 இல் 4,639 வழக்குகளும் 2015-16 இல் 4,693 வழக்குகளும் (மோசடியின் மதிப்பு ரூ.18,698 கோடி) பதிவாகியுள்ளன.
- இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மீது உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் மிகப்பெரிய மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
- இதனிடையே இந்திய வங்கிகளில் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி ரூ.8,40,958 கோடி அளவுக்கு வாராக்கடன் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,01,560 கோடி வாராக்கடன் இருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் கூறியிருந்தார்.
- பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.55 ஆயிரத்து 200 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.44 ஆயிரத்து 542 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.43 ஆயிரத்து 474 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.41 ஆயிரத்து 649 கோடி வாராக்கடன் உள்ளது.
- கனரா வங்கிக்கு வாராக்கடனாக ரூ.37 ஆயிரத்து 794 கோடி, ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.33 ஆயிரத்து 849 கோடி நிலுவையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
- வாரா கடன் வைத்துள்ள 9,000 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் 11 கார்ப்ரேட் நிறுவனங்கள் 26,000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பி அளிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் வாரா கடனால் இந்திய பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
- சிறுக சிறுக வங்கிகளில் சேர்த்து வைத்த மக்களின் பணத்தை நோகாமல் ஆட்டையை போட்ட தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு விவசாயிகளோ, வறுமையால் வாங்கிய கடனை கட்ட வழியின்றி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.