50 கோடிக்கு மேல் வாராக்கடன்களை கண்டுகொள்ளாத வங்கி சிஇஓ மீது கிரிமினல் நடவடிக்கை பாயும்
வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் நபர்கள் பற்றி சரியாக அரசுக்கு தெரிவிக்காத வங்கி தலைமை செயல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 120பி பிரிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளத
டெல்லி: ரூ.50 கோடிக்கும் அதிகமான வாராக்கடன்களில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகளை பொதுத்துறை வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள் கவனக்குறைவாக கண்காணிக்காத வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள்மீது கிரிமினல் சட்டம் பாயும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பொதுத் துறை வங்கிகள் மிக அதிக அளவில் வாராக்கடன் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த நபர்களினால் தற்போதைய நிலவரப்படி இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, விஜய் மல்லையா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர் குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேட்டன்குமார் சந்தேசரா, நீரவ் மோடி, நிஷால் மோடி, மெகுல் சோக்ஸி, சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ் ஜோபன்புத்ரா என பல மோசடி மன்னர்கள் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளில் சென்று பதுங்கியுள்ளனர்.
இந்திய வங்கிகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டியவர் விஜய் மல்லையா. அவர் வெளிநாட்டுக்கு தப்பிய பின்னர்தான் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 12 நிறுவனங்களுக்கான திவால் தடுப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வங்கிகளும், விசாரணை அமைப்புகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவற்றில் இடம் பெற்றுள்ள ஸ்டீல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனக் கணக்குகளில் சில முரண்பாடுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம், ரூ.5,000க்கும் கோடிக்கும் அதிகமான கடன் சுமை உடைய, வங்கிகளின் வாராக் கடனில் 25 சதவீதம் அளவுக்கு பங்களிக்கக் கூடிய 12 நிறுவனங்களைக் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, புதிய திவால் சட்டப்படி இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட்டில் மேலும் 28 நிறுவனங்களை திவாலாக வாய்ப்புள்ள நிறுவனங்களாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவற்றில் சில நிறுவனக் கணக்குகளில் மோசடி நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய திவால் சட்டப்படி நிறுவன மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வங்கிகள் 2 ஆண்டுகளுக்கு பரிவர்த்தனை தணிக்கை மேற் கொள்ளவேண்டும். தகவல்கள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் தடயவியல் தணிக்கையும் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ரூ.50 கோடிக்கும் அதிகமான வாராக்கடன்களில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகளை பொதுத்துறை வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள் கவனக்குறைவாக கண்காணிக்காமல் விடும் பட்சத்தில் அந்த வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள்மீது கிரிமினல் சட்டம் பாயும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கி மோசடி தொடர்பாக பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் நீரஜ் சிங்கால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மோசடிகளை சரியாக அரசுக்கு தெரிவிக்காமல், பின்னாளில் விசாரணை அமைப்புகள் மோசடியை கண்டறியும்பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் 120பி பிரிவுப்படி வங்கி அதிகாரிகள்மீது நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.