வங்கிகள் இணைப்பை கண்டித்து ஜனவரியில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் 2019 ஜனவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அ
டெல்லி: இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை வங்கி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019, ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன
7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும், ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளதுபோல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடந்த 21ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு, வாராக் கடன் வசூல், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை கடந்த 26ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் 4 லட்சம் வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் வங்கிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2019, ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, மும்பை பங்குச் சந்தையில் அளித்துள்ள நோட்டீஸ் கூறுகையில், " இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை வங்கி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019, ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், வங்கிச்சேவைகள் அதனுடைய கிளைகளில் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் நடந்தால், கடந்த 20 நாட்களுக்குள் நடக்கும் 3வது வங்கி வேலை நிறுத்தம் இதுவாகும்.