வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு
மும்பை: வீட்டுக்கடன், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கண்டிப்பாக எம்சிஎல்ஆர் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர் (மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இந்த புதிய முறைப்படி வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
வங்கிக் கடன்
கடந்த அரையாண்டுகளாக வட்டி விகிதத்தை அதிகரிக்காத காரணத்தினால், வங்கிகளின் வருவாய் குறைந்ததுடன், லாபமும் கணிசமாக வீழ்ச்சியடைந்தது. மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வங்கிகளும் போட்டி போட்டு குறைத்ததால், வீட்டுக்கடனுக்கான வட்டி வருவாய் குறைந்து லாபமும் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.
வங்கி வட்டி விகிதம்
பிப்ரவரி 7ம் தேதியன்று நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் (Repo Rate). பிற வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தையும் (Reverse Repo Rate) மாற்றம் செய்யாமல் பழைய விகிதமே தொடரும் என்று அறிவித்தது. கடந்த ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு மூன்று முறை கூடிய நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மாற்றம் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்
நடப்பு ஆண்டின் நிதிப் பற்றாக்குறையானது எதிர்பார்த்ததை விட அதிகரித்ததும், ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தற்காலிக பொருளாதார மந்த நிலை, சில்லறை பணவீக்க விகிதம், மற்றும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றை உத்தேசித்தே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றுவதில்லை என்ற முடிவை எடுத்தது.
வங்கிகள் முடிவு
கடந்த சில மாதங்களாக கடன் பத்திரங்களுக்கு வழங்கும் வட்டி விகிதமானது 1 சதவிகிதமும், வைப்பு சான்றிதழ்களுக்கு வழங்கும் வட்டி விகிதமானது 0.50 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துறையை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் நடைமுறை செலவுகளையும் ஈடுகட்டுவதற்காகவும், கடன்களை மேற்கொள்வதற்காக தேவைப்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
குறைந்த பட்ச அடிப்படை கடன்
கடன் பத்திரங்களின் மீதான வருவாயானது 7.5 சதவிகிமாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிமானது 8.30 சதவிகிமாக குறைந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளின் மிகக்குறைந்த விகிதமாகும். ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையின் படி குறைந்தபட்ச அடிப்படை கடன் விகிதத்தை (MCLR) பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
வட்டி விகிதம் உயர்வு
இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு காத்திருக்காமல் வட்டி விகிதத்தை உயர்த்த பெரும்பாலான வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் துறை வங்கியான எச்.டிஎப்.சி வங்கியானது கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது.
இது குறித்து எச்.டிஎப்.சி வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் பாரேஷ் சுதாங்கர் குறிப்பிடுகையில், தற்போதைய சூழ்நிலையில் வைப்புகளுக்கான வட்டி விகிதத்திற்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்திற்கும் இடைவெளி உள்ளது. இது வட்டி விகிதத்தில் நீர்த்த தன்மையை பாதிக்கும் என்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளோம், என்று கூறினார்.
பொதுத்துறை வங்கிகள்
முன்னதாக, பிறபல தனியார் துறை வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, எஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை வட்டி விகிதத்தை 0.01 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி கடந்த மாதம் வட்டி விகிதத்தை 0.30 சதவிகிதத்தை குறைத்தது. ஆனால், மற்ற வங்கிகள் இந்த வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.