பெல் - ரோல்டா நிறுவனத்திற்கு இந்திய பாதுகாப்பு துறையின் ரூ. 50,000 கோடி புராஜக்ட்!
பெங்களூரு: மத்திய பாதுகாப்புத்துறை மேற்கொள்ள, ரூ. 50,000 கோடி மதிப்புள்ள போர்க்கள மேலாண்மை திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு பெல் மற்றும் ரோல்டா நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
போர்க்கள மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியை பாதுகாப்பு அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை பெல் மற்றும் ரோல்டா இந்தியா நிறுவனம் ஆகியவை செய்யவுள்ளன. இதற்காக பெல் - ரோல்டா இணைந்து செயல்படவுள்ளன.
இது தொடர்பாக பெல் நிறுவனத்தின் மார்க்கெட்டின் துறை இயக்குநர் பி.சி.ஜெயின் கூறுகையில், ‘பி.எம்.எஸ். திட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள பெல் நிறுவனம் தயாராக உள்ளது. இயன்ற வரை உள்நாட்டிலேயே தேவையானவற்றை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
போர்த்திறன் சார்ந்த அலகுகளை கூடுதலாக மேம்படுத்துவது தான் பி.எம்.எஸ்.ன் முக்கிய நோக்கமாகும். இதற்கான பணிகளை பெல் நிறுவனம் செய்து வருகிறது.
முக்கிய மென்பொருள் உற்பத்தி மற்றும் கையாளும் பணிகள் ரோல்டா நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பெல் நிறுவனத்துடன் இணைந்து ரோல்டா நிறுவனம் மேற்கொள்ளும்.