மின்னணு பண பரிவர்த்தனைக்கு வரிச்சலுகை கிடைக்குமா-? எதிர்பார்ப்பு அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்பட உள்ள 2017-2018 ஆம் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளுக்கு வரிச்சலுகை அறிவிப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக மத்திய அரசு ரொக்க பரிவர்த்தனையை தவிர்த்து விட்டு அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் இணைய வங்கி மற்றும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள ஊக்கப்படுத்தி வருகிறது.
ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு சேவைக்கட்டணம் வசூலித்து வருகின்றது, ஆனால், அதே சமயம் இணைய வங்கி மற்றும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனையை சேவைக் கட்டணம் தரத்தேவை இல்லை என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான வர்த்தகர்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
சேவைக்கட்டணம்
பொதுமக்கள் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கின்றனர். காரணம் கேட்டபோது, தாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணம் வசூலிக்கவில்லை என்றாலும், வங்கிகள் தங்களிடம் இருந்து பரிவர்த்தனைக்கான சேவைக்கட்டணத்தை தங்களிடம் இருந்து பிடித்தம் செய்து கொள்வதாக காரணம் சொல்லி கைவிரிக்கின்றனர்.
கடைக்காரர்கள் வசூல்
இதுபற்றி ஒரு கடைக்காரரிடம் விசாரித்த போது, சாதாரணமாக பொங்கல் பண்டிகைக் காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால். இப்போது பணத்தட்டுப்பாடு நிலவுவதால் ரொக்க விற்பனை மந்தமாக இருக்கிறது. அப்படியே டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் விற்பனை ஆனாலும், விற்பனையான தொகைக்கு 1 முதல் இரண்டு சதவீதம் சேவைக் கட்டணம் வசூலிப்பதால், வாடிக்கையாளர்கள் தகராறு செய்கின்றனர். இதனால், எங்களுக்கு விற்பனை பாதிக்கிறது என்றார்.
வரிச்சலுகை
இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான், மத்திய அரசு வரும் 2017 - 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு வரிச் சலுகை அளிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
நிதி அமைச்சர்
தற்போது, உணவகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தங்கள் பில்களுக்கு 14 சதவீதம் சேவை வரியும் கூடுதலாக 1 சதவீதம் சுவாச் பாரத் மற்றும் கிருஷி கல்யான் செஸ் வரியும் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஒரு மூத்த வங்கி மேலாளர் கூறியபோது, பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) விதிப்பு முறை செயல்படுத்தப்படும்வரை இந்த அசௌகரியங்களை தவிர்க்க முடியாது என்றும், இதற்கு வரும் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நல்ல பதில் அளிப்பார் என்றும் கூறினார்.
பரிவர்த்தனைக் கட்டணம்
தனியார் துறை வங்கி தலைமை அதிகாரி இது பற்றி கூறுகையில், வங்கிகள் முன்பு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணத்தை தள்ளுபடி செய்தாலும், இப்போது பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. ஏன் என்றால், வங்கிகள் பரிவர்த்தனைக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி இருப்பதால் நாங்கள் வசூலிக்கிறோம் என்கின்றனர், ஆனால், தனியார் துறை வங்கிகள் அப்படி பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலிப்பதில்லை. வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக பரிவர்த்தனைக் கட்டணத்தை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
கட்டணத் தள்ளுபடி
ஆயினும், தற்போது, பாரத ஸ்டேட் வங்கியானது, விதி விலக்காக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலும், 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை கட்டணத்தை தள்ளுபடி செய்து சிறப்பு சலுகை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, வரும் பட்ஜெட்டில், அனைத்து வகையான மின்னனு பரிவர்த்தனைகளுக்கும் சிறப்பு சலுகையாக பரிவர்த்தனைக் கட்டணத் தள்ளுபடி என்ற இனிப்பான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.