பட்ஜெட் 2018: சலுகை மழையா? வழக்கம் போல அருண்ஜெட்லி அல்வாதானா?
டெல்லி: 2018 - 19 பட்ஜெட்டில் நடுத்தர பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று சம்பளதாரர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 29ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல்தான்.
2018-2019ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2018 - 19
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை மனதில் வைத்து பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருமான வரி உச்சவரம்பு வருவாய் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக உள்ளது. இதுபோல் பிபிஎப் அல்லது 5 ஆண்டு அல்லது அதற்கு மேலான வங்கி டெபாசிட்கள் ஆகியவற்றுக்கு, வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. உடல்நல காப்பீட்டுக்கு ரூ. 25,000 வரை சலுகை பெறலாம்.
வருமானவரி
2018 -19 பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு தற்போதுள்ள 2.55 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் ரூ.5 லட்சம் வரை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
30 சதவிகித வரி
5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவிகித வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்ச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண் ஜெட்லி அல்வா
கடந்த 2017 -18 பொது பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் அதற்கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்த ஆண்டு லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பல சலுகை மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்றே எதிர்பார்க்கலாம்.