பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி 10% அதிகரிக்க வாய்ப்பு
உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி போதுமானதாக இல்லாததால் வரும் நிதி ஆண்டில் இருந்து கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதிக்கான ஒதுக்கீட்டை 10சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் போதுமான உணவு கிடைக்க செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தது.
இதன்மூலம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய முடியும்.
உணவுப்பொருட்களுக்கு மானியம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரையிலும் மானிய விலையில் உணவு தானியங்களை மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றது.
பட்ஜெட்டில் நிதி
இதற்காக நடப்பு நிதி ஆண்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 1,45,338 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு திட்ட நிதி
உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி போதுமானதாக இல்லாததால் வரும் நிதி ஆண்டில் இருந்து கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான மானியத்தை மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது பட்ஜெட் 2018
நடப்பு நிதி ஆண்டில் உணவு பாதுகாப்பு மானிய திட்டத்திற்காக சுமார் 1.96 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் செலவிடப்பட்டுள்ளது. வரும் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உணவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரேசன் பொருட்கள்
அரிசி மற்றும் கோதுமை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு வழங்ககப்படுவதால் இவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது சுமார் 8 சதவிகிம் வரையிலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே வரும் நிதி ஆண்டில் இதற்கான நிதியானது 10 சதவிகிதம் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரூ.2க்கு அரிசி
தற்போது உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசானது ஒரு கிலோ அரிசியை இரண்டு ரூபாய்க்கும் கோதுமையை மூன்று ரூபாய்க்கும் வழங்கி வருகிறது. இந்த விலையை வரும் ஜூன் மாதம் வரையிலும் மாற்றப் போவதில்லை என்றும் இதற்கான மானிய சுமையை மத்திய அரசே ஏற்கும் என்றும் மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.