பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்பிற்கு முன்னுரிமை - நிதின் கட்காரி
2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிதியையும் ஒதுக்கவேண்டும். கூடவே இவற்றிற்கு தேவையான முதலீடுகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் நிதின்கட்காரி வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முன்னுரிமை தருவதாக இருக்கலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாக இருப்பது விவசாய உற்பத்தி மற்றும் தொழில் துறை உற்பத்தியாகும். இவற்றிற்கு உறுதுணையாக இருப்பது உள்கட்டமைப்பு வசதியாகும்.
உள்கட்டமைப்பு வசதியானது போதுமான அளவிற்கு இருந்தால் தான் உற்பத்தியும் விவசாய உற்பத்தியும் தங்கு தடையின்று நடைபெறும்.
உள் கட்டமைப்பு வசதி
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்திற்கும் உள்கட்டமைப்பிற்கும் துறைக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் இவ்விரண்டு துறைகளுக்கும் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டியால் பாதிப்பு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்பு விவசாய உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கும், உள்கட்டமைப்பிற்கு தேவையான கட்டுமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியானது மிக அதிகமாக இருந்ததால் இவ்விரண்டு துறைகளும் சற்று மந்த நிலையில்தான் இருந்து வருகின்றது.
பொருளாதார வளர்ச்சி
கட்டுமான துறையானது ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருவதால் உள்கட்டமைப்பு துறையானது மிகவும் மந்த கதியில் இருந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஒற்றை இலக்க எண்ணை தாண்ட மறுக்கிறது. தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவிகிமாக இருந்து வருகிறது.
விவசாயதுறை வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தை நோக்கி கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கும் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டு துறைகளின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதமானது அதிக பட்சமாக இருப்பதால் தான் இவ்விரு துறைகளின் வளர்ச்சியானது தடைபட்டுள்ளது.
விவசாயத்துறை
இதனை உணர்ந்து தான் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக பட்ச வரியான 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிமாக குறைப்பதாக அறிவித்தார். அதுபோல கட்டுமான துறையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர தீவிரமாக பரிசீலித்து வருவதாக அறிவித்தார்.
நிதி பற்றாக்குறை
2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதத்தில் முன்கூட்டி செலுத்திய வருமான வரியானது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 18 சதவிகிதம் அதிமாக இருப்பதால் நிதிப் பற்றாக்குறையானது கட்டுக்குள் இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஆகவே, வரும் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பிற்கு தேவையான முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தி வருகின்றனர்.
அட்வான்ஸ் வரி
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் இதனை வலியுறுத்தி உள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பின்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்த கதியில் இருந்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் முன்கூட்டி செலுத்திய வரியானது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 18 சதவிகிமாக உள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறையானது கட்டுக்குள் உள்ளது என்று கூறியுள்ளார் கட்காரி.
விவசாயத்துறை வரி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தை நோக்கி நகர்த்த தேவையான நடவடிக்கையை முடுக்கி விடவேண்டும். இதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். இருந்தாலும் நாம் இதை சாதிப்போம் என்று நம்புகிறேன். இதற்காக விவசாயத்திற்கும் உள்கட்டமைப்பு துறைக்கும் போதுமான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கட்காரி கூறியுள்ளார்.
நிதி ஒதுக்க வேண்டும்
இந்தியப் பொருளாதாரமானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகும். உலகளாவிய முதலீட்டாளர்களும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். வரும் 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிதியையும் ஒதுக்கவேண்டும். கூடவே இவற்றிற்கு தேவையான முதலீடுகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் நிதின்கட்காரி வலியுறுத்தியுள்ளார்.