ஜிஎஸ்டி வரி - ஜூன் மாதத்தில் கார் விற்பனை 11% சரிவு
கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக அகில இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் கூறியுள்ளது.
டெல்லி: கடந்த ஜூன் மாதத்தில் கார் கடும் சரிவை சந்தித்துள்ளது. காரணம் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைதான் என்று அகில இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் கூறியுள்ளது.
ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி பற்றிய எதிர்பார்ப்பில் பலரும் கார்கள், இருசக்கர வாகனங்களை வாங்காமல் ஒத்திப்போட்டதால் ஜூன் மாதம் வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பு பயணிகள் வாகனங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
முந்தைய ஆண்டான 2016 டிசம்பர் மாதத்தின் விற்பனையுடன் ஒப்பிடும்போது சுமார் 1.36 சதவிகிதம் குறைவாகவே விற்பனையானது. இந்த பாதிப்பானது படிப்படியாக சீரடைந்து கடந்த ஜனவரியிலிருந்து விற்பனை உயரத்தொடங்கியது.
கார்கள் விற்பனை
கார் விற்பனையானது நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதத்தில் 7,27,658 கார்கள் என்ற அளவில் இருந்தது. இது கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 4.38 சதவிகிதம் அதிகமாகும். மேலும் உள்நாட்டு கார்களின் விற்பனை சுமார் 3.89 சதவிகிதம் அதிகமாகும்.
ஜிஎஸ்டி வரி எதிரொலி
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி முறை ஜூலையில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசாணை வெளியிட்டது. வாட் வரிவிதிப்பு முறையில் கார்களின் விற்பனைக்கு 14.5 சதவிகித வரி விதிக்கப்பட்டு வந்தன.
கடுமையான பாதிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், கார்களின் விற்பனைக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கார்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததைப் போலவே கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக அகில இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் (South Indian Automobile Manufacturers) தெரிவித்துள்ளது.
11.21 சதவிகிதம் பாதிப்பு
கடந்த ஜூன் மாதத்தில் 1,98,399 யூனிட்கள் கார்கள் விற்பனையானது என்றும், இது கடந்த 2016ம் ஆண்டின் விற்பனையான 2,23,454 யூனிட் கார்களை விட சுமார் 11.21 சதவிகிதம் குறைவு என்றும் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கார் விற்பனை சரிவுக்கு காரணம்
செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனத்தின் இயக்குநர் விஷ்ணு மாத்தூர், ஜூன் மாதத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற விற்பனை பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தோம். அதில் பயணிகள் கார் விற்பனை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. இது வரும் மாதங்களில் சீரடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
வாகன விற்பனை சரிவு
ஜி.எஸ்.டி. மீதான எதிர்பார்ப்பு காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 11.21 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஜூன் மாதத்தில் 1,98,399 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளன.
வாகன விற்பனை 11.21% சரிவு
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2013ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 13 சதவிகிதம் சரிவடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 11.21 சதவிகித சரிவைப் பதிவு செய்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள்
மோட்டார் சைக்கிள் விற்பனையை எடுத்துக்கொண்டால், சென்ற ஜூன் மாதத்தில் 2.18 சதவிகித உயர்வுடன் 9,64,269 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2016 ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 9,43,706 ஆக மட்டுமே இருந்தது. அதேபோல, ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை 4 சதவிகிதம் அதிகரித்து 15,27,049 ஆக இருந்தது.
28 சதவிகித ஜிஎஸ்டி வரி
வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 1.44 சதவிகிதம் உயர்ந்து 56,890 ஆக இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரியில் பெரும்பாலான வாகனங்கள் அதிகபட்ச வரி வரம்பான 28 சதவிகிதத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனுடன், வாகனங்களின் என்ஜின்களைப் பொறுத்து, 1 முதல் 5 சதவிகிதம் வரையில் கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி எதிர்பார்ப்பால் பயணிகள் வாகன விற்பனை சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.