ரூபாய் மதிப்பு சரிவு- தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியை குறைக்க முடிவு
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் தேவையில்லாத பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஒருபக்கம் பொதுஜனங்களின் பாக்கெட்டை பதம் பார்த்து வருகிறது. மற்றொரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால் நாட்டில் பொருளாதாரரீதியாக மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும், பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. இறக்குமதி நடவடிக்கைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியினால் அத்தியாவசியமில்லா பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.4 சதவிகிதமாக உயர்ந்ததின் எதிரொலியாகவே இந்த நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி குறைப்பு நடவடிக்கை
இது குறித்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான தங்களது வரிகளைக் குறைத்துள்ளன. சென்ற அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருந்தது. மாநில அரசுகள் வரிக் குறைப்பை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளன. எனவே மாநிலங்கள் வரிக் குறைப்பில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தர்மேந்திர பிரதான்.
தங்கம், மின்னணு பொருட்கள்
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவினால் ஏற்பாடும் பாதிப்பை கட்டுப்படுத்த அத்தியாவசியமில்லா பொருட்களான தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் கார்க் இதனை சூசகமாக கூறியுள்ளார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 65 சதவிகித உயர்வுடன் மொத்தம் 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதேபோல, மின்னணு சாதனங்களின் இறக்குமதியும் 15 சதவிகித உயர்வுடன் 24.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஏற்றுமதி
மின்னணு சாதனங்களைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - ஜூலை காலாண்டில் மொபைல் போன்கள் 16.2 சதவிகிதமும், 105 சென்டிமீட்டருக்கு மேல் அளவு கொண்ட வண்ணத் தொலைக்காட்சிகள் 101 சதவிகிதமும், டிஜிட்டல் கேமராக்கள் 153 சதவிகிதமும் கூடுதலான அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களின் இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
2017-18 நிதியாண்டு
பல்வேறு சர்வதேசக் காரணிகளால் தற்போது இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வைஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜாய் ரன்கோத்கே கடந்த மாதம் பேசிய போது, 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதமாக இருந்த நிலையில் நடப்பு 2018-19 நிதியாண்டில் 2.5 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டில் எண்ணெய் அல்லாத பொருட்கள் இறக்குமதிக்கான அதிக தேவை போன்ற காரணங்களால் இந்த சூழல் உருவாகக் கூடும் என்றும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே பெட்ரோலியப் பொருட்கள் வரலாறு காணாத விலையேற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக இருந்தாலும் உள்நாட்டில் மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கும் பல்வேறு வரிகளும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளன. இதனால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.