தமிழகத்தில் வறட்சி பாதிப்பு... நூறு நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு
தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 50 நாட்கள் இத்திட்டத்தினை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாள் வேலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய கடந்த 2006ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்று பெயரிடப்பட்டது.
கிராம மக்களுக்கான திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் கிராமப்புற மக்கள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் ஊதிய நிர்ணயம், நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக் கிறது. அதன்படி ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விலை நிர்ணயப்படி பல்வேறு மாநிலங்களில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊதியம் எவ்வளவு?
தமிழகத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.183ல் இருந்து ரூ.203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரூ.229ல் இருந்து ரூ.240 ஆகவும் கர்நாடகாவில் ரூ.204ல் இருந்து ரூ.224 ஆகவும் ஆந்திராவில் 180ல் இருந்து ரூ.194 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் அதிகம்
ஹரியாணாவில் ஏற்கெனவே ரூ.251 ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.259 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஹரியாணாவில்தான் மிக அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக சண்டிகரில் ரூ.248, கேரளாவில் ரூ.240 ஊதியம் அளிக்கப்படுகிறது.
50 நாட்கள் அதிகரிப்பு
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் படி, தமிழகத்துக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நடப்பு நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களோடு, கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலனடையும் மக்கள்
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த உத்தரவினால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்படும். பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.