இந்திய ஜிடிபி இரட்டை இலக்கை எட்டுவது சவால் என்றாலும் சாத்தியமே- பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சவாலான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி விகிதத்தை இரண்டு இலக்கம் கொண்டதாக உயர்த்துவது தற்போது ஒரு சவாலாக இருந்தாலும் அது சாத்தியமே என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் நான்காவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும், முதலமைச்சர்களும், துணைநிலை ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நிதி ஆயோக் நிர்வாகக்குழு வரலாற்று மாற்றத்தை கொண்டுவரக் கூடிய வகையில் இருக்கும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். ஒத்துழைப்பு மற்றும் துடிப்பு மிகுந்த கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளை நிடி ஆயோக், கவுன்சில், 'டீம் இந்தியா' என்ற வகையில் அணுகியது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒத்துழைப்பு, கூட்டாட்சி முறை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
முத்ரா யோஜனா, ஜன் தன் யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் மக்களுக்கு நிதிச் சேவைகளைக் கொண்டு சேர்க்கப் பெரிதும் உதவியாக இருப்பதாக மோடி கூறினார். மத்திய அரசின் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் நிதி ஆண்டின் கடைசி காலிறுதிவரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகிறது. இப்போது நாட்டின்முன் இருக்கும் முக்கிய சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதுதான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய இந்தியா எனும் இலக்கை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிதி ஆயோக்கின் நிர்வாகக்குழு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை உண்டாக்கும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் மோடி தெரிவித்தார். பின்தங்கியுள்ள மாவட்டங்களை மேம்படுத்துவது, ஆயுஷ்மன் பாரத், மிஷன் இந்திரதனுஷ், ஊட்டச்சத்துத் திட்டம், மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்தி வருவதாக மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் எந்தவிதத்திலும் திறமைக்கோ, திறனுக்கோ, வளத்துக்கோ பற்றாக்குறை இல்லை. மாநிலங்களுக்கு நிதி வழங்குவது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை ரூ.6 லட்சம் கோடி என்ற என்றநிலையில் இப்போது மாநிலங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி தரப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய உதவிகளை வழங்கும் எனவும் பிரதமர் மோடி நிதிஆயோக் கூட்டத்தில் உறுதியளித்தார்.