ஐசிஐசிஐ சிஇஓ சாந்தா கோச்சாருக்கு கட்டாய விடுப்பு - சிஓஓ ஆக சந்தீப் பக்ஷி நியமனம்
வீடியோகான் லோன் விவகாரத்தில் சிக்கிய ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சார், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சிஒஒ ஆக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கோச்சார் மீதான புகார் குறித்த விசாரணை முடியும் வரை வங்கி பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், 56. இவர், விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக இவரது கணவரின் நிறுவனத்துக்கு வீடியோகான் நிறுவனம் சலுகை அளித்ததாகவும் கூறப்பட்டது.
வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடனில் ஒரு பகுதி வாராக்கடனாக மாறியுள்ளது. கடனுக்கு பிரதி உபகாரமாக சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்யுள்ளதாக தெரிகிறது. மேலும் 7 நிறுவனங்களின் அந்நிய செலாவாணி கடன்களை மறுசீரமைக்க சாந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சந்தா கோச்சார் மீது தற்போது இரண்டு குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. தீபக் கோச்சார், ராஜீவ் கோச்சார் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால் ஐசிஐசிஐ நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் சந்தா கோச்சாரை பதவி விலக வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் உயர்மட்ட நிர்வாகத்தை மாற்றும் பணியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சந்தா கோச்சார் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை சுதந்திரமாக நடக்கும் வகையில் விசாரணை முடியும் வரை அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐசிஐசிஐ குழுமத்தின் லைப் இன்ஷூரன்ஸ் பிரிவு தலைவர் சந்தீப் பக்ஷி வங்கியின் சிஒஒ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சந்தா கோச்சார் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிஎன் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு குற்றச்சாட்டு மீதான விசாரணை முழுமையாக முடியும் வரையில் சந்தா கோச்சாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது இடைக்காலச் சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளார்.
1986 முதல் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றும் சந்தீப் பக்ஷி ஐசிஐசிஐ வங்கியின் இன்சூரன்ஸ் கிளை ஐசிஐசிஐ லாம்பார்டு உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தார். 2009-10 வரையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் ரீடைல் வங்கி பிரிவின் தலைவராக இருந்தார். அதன் பின்பு ஆகஸ்ட் 2010இல் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைப் பிரிவின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.