சென்னை வெள்ளம்: வீட்டுக்கடன் அபராதம் ரத்து - இம்புரூவ்மென்ட் லோன் தருகிறது ஹெச்.டி.எப்.சி
சென்னை: சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கடனுக்கான தவணையை தாமதமாக செலுத்தினால் வசூலிக்கப்படும் அபராதத்தை நவம்பர் மாதத்திற்கு எச்.டி.எப்.சி வங்கி ரத்து செய்துள்ளது
சென்னையில் நடுத்தர வர்க்கத்தினரும், மாத சம்பளகாரர்கள் பலரும் வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று புறநகரில் வீடுகள், அபார்ட்மென்ட்களில் ப்ளாட்கள் வாங்கியுள்ளனர். கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. இனி அந்த வீடுகளில் வசிக்கமுடியுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாகவே பலரும் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதில் வீட்டுக்கடனை எப்படி கட்டுவது என்பதுதான் பலரின் கவலையாக உள்ளது. ஒருநாள் தாமதமானாலே கடனுக்கு அபராத வட்டி செலுத்த வேண்டும், வெள்ள பாதிப்புடன் இந்த கவலை வேறு நடுத்தர வர்க்க மக்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெச்.டி.எப்.சி வங்கி மிகமுக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கடனுக்கான தவணையை தாமதமாக செலுத்தினால் வசூலிக்கப்படும் அபராதத்தை நவம்பர் மாதத்திற்கு ரத்து செய்துள்ளது
அதேபோல், வெள்ளத்தால் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை நிவர்த்தி செய்ய குயிக் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன்களையும் வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த வகை கடன்கள் அனைத்திற்கும் எவ்வித பிராசசிங் கட்டணங்களும் கிடையாது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் எச்.டி.எப்.சி. விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் கடன் பெறுவதற்காக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் என எச்.டி.எப்.சி. லிமிடெட் நிர்வாக இயக்குனர் ரேணு சுத் கர்னாட் தெரிவித்துள்ளார்.