தீபாவளி வந்தாச்சு... சென்னையில் பட்டாசு விற்பனை படுஜோர்
சென்னை தீவுத் திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ உள்ளிட்ட 24 இடங்களில் சுமார் 1600 ரகங்களுடன் தீபாவளி பட்டாசு விற்பனை களை கட்டியுள்ளது.
சென்னை: தீபாவளிக்கு இன்னும், ஒரு நாளே உள்ளது. சென்னையில் தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை தினமான நேற்று பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
பட்டாசு தயாரிப்பு, மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு விலை உயர்ந்து கொண்டே வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை தொடங்கப்படுவது வழக்கம்.
பட்டாசு விற்பனை கடைகள்
இந்த ஆண்டு, தீவுத் திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், அண்ணாநகர் கந்தசாமி விளையாட்டு திடல், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், கொட்டிவாக்கம் ஒஎம்சிஏ மைதானம் என 5 இடங்களில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கூட்டுறவுத்துறை சார்பில், டியூசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடிகள் மூலம் 10 இடங்கள், மற்ற கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 14 இடங்கள் என சென்னையில் மொத்தம் 24 இடங்களில் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பட்டாசு விற்பனை
சென்னையின் மிகப்பிரதான பட்டாசு விற்பனை மையமாக விளங்கும் தீவுத்திடலில், இந்த ஆண்டு 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் தீ தடுப்பு அணைப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள், கடைகளின் எண்ணிக்கையால், மக்களின் வரவேற்பு பெற்ற இடமாக தீவுத்திடல் உள்ளது.
பட்டாசு விலை உயர்வு
புதிய வரவுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதாகவும், எனினும் ஜி.எஸ்.டி வரியால் பட்டாசு விலை சற்றே உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள். இந்த ஆண்டு கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரங்களுக்கு நவீன வடிவம் கொடுத்துள்ளனர். சிறுவர்களுக்கான பொம்மை துப்பாக்கி இந்த ஆண்டு பவர் ரேஞ்சர் கன் வடிவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சென்னையில் பட்டாசு விற்பனை
இந்த ஆண்டு தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நிலவரம் தொடர்பாக கூறும் விற்பனையாளர்கள், இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டாலும், சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் விலை குறைப்பு செய்துள்ளன. அதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை 10 சதவீதம் குறைந்துள்ளது.
1600 ரகங்கள் விற்பனை
தற்போது குறைந்தபட்சமாக ரூ.160 விலையில் 20 வகை பட்டாசுகள் கொண்ட பரிசு பெட்டகம் கிடைக்கிறது. இது கடந்த ஆண்டு ரூ.400 ஆக இருந்தது. இங்கு 60 கடைகளை திறந்துள்ளோம். சுமார் 1600 ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் சுமார் 600 ரகங்கள் புதிய ரகங்களாகும்.
வானவேடிக்கை பட்டாசுகள்
இந்த தீபாவளிக்கு அதிக சப்தத்தோடு வெடிக்கும் பட்டாசுகளை விட, வாணவேடிக்கை, மத்தாப்பு உள்ளிட்ட சப்தமில்லாத பட்டசுகள் மீதே மக்களின் ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் விற்பனையாளர்கள்.
பலர் குறிப்பிட்ட பட்டாசை எப்படி வெடிப்பது என்றே தெரியாமல் வெடிக்கின்றனர். முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்கினால் சம்பந்தப்பட்ட பட்டாசின் சிறப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு நாங்கள் விளக்க ஏதுவாக இருக்கும் என்றார்.
இரவு 12 மணிவரை விற்பனை
இங்கு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும். 17ஆம் தேதி இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்கும். 18ஆம் தேதியும் கடைகள் உண்டு பட்டாசுகளை வாங்கி வெடிக்கலாம் என்கின்றனர் விற்பனையாளர்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டாசு விற்பனை 47 சதவீதம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விற்பனையாளர்கள்.