தங்க நாணய இறக்குமதி தடை ரத்து இல்லை: ப. சிதம்பரம்
டெல்லி: தங்க நாணய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட மாட்டாது, வேண்டுமானால் உள்ளூர் சந்தைகளில் தங்கம் வாங்கி நாணயங்களாக செய்து கொள்ளுங்கள் என தங்க நகை வியாபாரிகளுக்கு தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
சமீபத்தில் தங்க நாணயங்கள், பதக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், பரிசளிப்பதற்காக தங்க நாணயங்கள் தேவைப் படுவதாகவும், எனவே தங்க நாணய இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தங்க நாணய இறக்குமதிக்கு விதிக்கப் பட்ட தடையை ரத்து செய்ய இயலாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
முண்ணனி....
உலகளவில் தங்க இறக்குமதியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு 162.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
கோரிக்கை...
தங்கத்தின் இறக்குமதி அதிகரித்த காரணத்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் பெருகியது. இதன் காரணமாக தங்க நாணயங்கள், பதக்கங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், பரிசளிப்பதற்காக தங்க நாணய இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறாது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்....
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது, ‘தங்க நாணயங்கள், பதக்கங்கள் இறக்குமதிக்கு தடை உள்ளது. அதை நீக்க முடியாது. யாரும் இவற்றை இறக்குமதி செய்ய முடியாது. தங்க இறக்குமதி தொடர்பான விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வங்கிகளை அறிவுறுத்தி உள்ளேன்" என்றார்.
யோசனை
மேலும், தங்க நாணயம் வேண்டுமென்றால், உள்ளூர் சந்தையில் தங்கம் வாங்கி நாணயங்கள் தயாரித்து கொள்ளுங்கள் என்று வியாபாரிகளுக்கு ப.சிதம்பரம் யோசனை கூறியுள்ளார்.