வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: கவலையில் கடன் தவணை செலுத்துவோர்!
சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதை நினைத்து கடன் தவணையை செலுத்துபவர்கள் கவலையில் கன்னத்தில் கையை வைத்து அமர்ந்துள்ளனர்.
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் ஆண்டு கணக்கு முடிக்க வேண்டும் என்பதால் வங்கிகள் செயல்படாது. ஏப்ரல் 2ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்று வங்கிகள் செயல்படாது. மறுநாள் அதாவது ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
சனிக்கிழமை அரை நாள் தான் வங்கிகள் செயல்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடபப்படுவதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இ.எம்.ஐ.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதன் மாதத் தவணையை திருப்பிச் செலுத்தும் தேதி 1,4,7 ஆகும். தற்போது வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மாதத் தவணையை திருப்பிக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பளம்
வங்கிகளில் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் மாதா மாதம் சம்பளம் வந்த பிறகு அதை வைத்து தான் மாதத் தவணையை செலுத்துகிறார்கள். தற்போது சம்பளம் வரவே தாமதமாகும் என்பதால் மாதத் தவணையை எப்படி செலுத்தப் போகிறோம் என்று பலர் கவலையில் உள்ளனர். சிலருக்கு மாதத்தின் கடைசி நாள் சம்பளம் வரும். சிலருக்கு 1ம் தேதியோ அல்லது 5ம் தேதியோ அல்லது 7ம் தேதியோ சம்பளம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம்
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதால் ஏ.டி.எம். மையங்கள் செய்லபடுவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ.
வங்கிகளின் தொடர் விடுமுறை பற்றி பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் பாரத ஸ்டேட் வங்கிகள் செயல்படும் என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை செயல்படாது என்றும், சனிக்கிழமை பணப் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்
சனிக்கிழமை அரசு கருவூலங்களுக்கு விடுமுறை. அதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 6ம் தேதியானால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.