ராஜஸ்தானில் பாலை விட பசு கோமியத்திற்கு விலை அதிகம் - ஒரு லிட்டர் ரூ.30க்கு விற்பனை
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலை விட பசுவின் கோமியத்துக்குத்தான் அதிகமான விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் ரூ.30க்கு விற்பனையாவதால் பசு மாடு வளர்ப்பவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பசு மாடுகள் வளர்ப்போருக்குப் பால் வியாபாரத்தைக் காட்டிலும், கோமியம் விற்பனையின் மூலம் கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. ஒரு லிட்டர் ரூ.30க்கு விற்பனையாவதால் பசு மாடு வளர்ப்பவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பசு கோமியம் பிடிக்க இரவு முழுவதும் கண் விழித்திருக்கவும் தயங்குவதில்லை.
பசுவின் கோமியத்தை புனித பொருளாக போற்றுகின்றனர். பசுவின் கோமியம் நுண்ணுயிர் கொல்லி என்பதால் புதுமனை புகுவிழாக்களின் போது வீடுகளில் தெளிக்கப்படுகிறது. பசுவின் சாணத்தை அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் கிருமிநாசினி’ என்பார்கள். பசுவின் கோமியத்தை வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது.
பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் இருப்பது குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளது. கோமியத்தை பாட்டிலில் அடைத்து ஆன்லைனில் விற்பதும் நடந்துவருகிறது. குறிப்பாக, அமேசான் டாட்காமில் முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று, கோமூத்ரா அர்கா என்ற பெயரில் கோமியத்தை விற்பனை செய்கிறது.
நோய் நீக்கும் கோமியம்
கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பசுக்களை தெய்வமாக பூஜிக்கின்றனர்.
உத்தரபிரதேசத்தில் பசுவின் கோமியத்தில் இருந்து கல்லீரல் நோய், மூட்டுவலி, நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகளை தயாரிக்கின்றனர்.
விவசாயத்திற்கு இயற்கை உரம்
பாரம்பரிய மரபில், பஞ்ச கவ்யம் எனப்படும் பசு சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களால் செய்யப்படும் கலவையானது விவசாயம் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படுவது வழக்கம். பசும் சாணம் - பாக்டீரியா, பூஞ்சானம், நுண் சத்துகள் நிரம்பியதாகவும், கோமியம் - பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து கொண்டுள்ளதாகவும் உள்ளது. பால் - புரதம், கொழுப்பு, மாவு, அமினோ அமிலம், கால்சியம் சத்துகளையும், தயிர் - ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையைத் தரவல்ல நுண்ணுயிர்களையும் (லேக்டோபேஸில்லஸ்), நெய்- வைட்டமின் ஏ, பி, கால்சியம், கொழுப்புச் சத்து ஆகியவற்றை கொண்டுள்ளதால் இதன் மூலம் பயிரின் வளர்ச்சி சிறக்கும் என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ குணம் கொண்ட கோமியம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுவின் கோமியத்தில் தங்கம் உள்ளதை குஜராத் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜூனாகாத் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து குஜராத் பசு மாட்டினமான கிர் மாட்டினை கொண்டு 4 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் அதன் சிறுநீரில் தங்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பசு கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதை கண்டறிந்துள்ள ஆய்வறிஞர்கள், அதில் 388 பொருட்கள் மருத்துவ பண்பு கொண்டவை என்றும் தெரிவித்துள்ளனர்.
பசு கோமியத்திற்கு டிமாண்ட்
ராஜஸ்தான் மாநிலத்தில் பசு கோமியத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் அதிக அளவில் கோமியத்தை வாங்கிச் செல்கின்றனர். உயர்ரக பசுக்களான கிர், தர்பாக்கர் ஆகிய பசுக்களின் சிறுநீர் லிட்டர் குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை மொத்தச் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், பால் ஒருலிட்டருக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை மட்டுமே கிடைக்கிறது.
உரம் தயாரிக்க பயன்படும் கோமியம்
பயிர்களைப் பூச்சி தாக்குவதில் இருந்து காக்க பசுவின் கோமியத்தை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் யாகம் வளர்க்கவும், பஞ்சகவ்யம் செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உதய்பூரில் உள்ள மகாராணா பிரதாப் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு மாதத்துக்கு 500 லிட்டர் பசுவின் கோமியம் உரம் தயாரிக்க தேவைப்படுகிறது. இதனால், சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்து பசுவின் கோமியத்தை நாள்தோறும் வாங்கி வருகிறது. வேளாண் சோதனைத் திட்டங்களுக்காக மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பசுவின் கோமியத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பல்கலையின் துணைவேந்தர் உமா சங்கர் கூறியுள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்து
ஜெய்ப்பூரில் இயற்கை வேளாண் பண்ணை நடத்தி வரும் கைலேஷ் குஜ்ஜார் கூறுகையில், பசுவின் கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் எனக்குக் கூடுதலாக 30 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக பசுவின் கோமியம் சிறந்த மாற்று மருந்தாக இருப்பதால், இதை விவசாயிகள் விரும்புகிறார்கள். மேலும், மருத்துப் பயன்பாட்டுக்கும், வீட்டில் பூஜைகள் செய்வதற்கும் மக்கள் கோமியத்தை அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள் என்கிறார்.
கோமியத்தில் அதிக லாபம்
இப்போதெல்லாம் நான் இரவில் அதிகமாகக் கண்விழிக்கிறேன். பசுவின் கோமியம் வீணாக கழிவுநீரோடையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதைப் பிடிப்பதற்காக கண் விழித்திருக்கிறேன். பசு நமது தாய், அதற்காக இரவு முழுவதும் விழித்திருப்பதில் தவறில்லை எனவும் குஜ்ஜார் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மீனா, பால் வியாரத்தில் லாபம் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து இப்போது, பசுவின் கோமியம் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார். ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.30க்கு வாங்கி அதை ரூ.50 வரை இயற்கைப் பண்ணைகளிலும், வீடுகளிலும் விற்பனை செய்கிறார். பாலை விட கோமியம் விற்பனையில் நல்ல லாபம் கிடைப்பதால் ராஜஸ்தானில் மாடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.