பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - கள்ள நோட்டுகளும்தான்
பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு நாட்டில் பணப்புழக்கத்தின் அளவு இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
சென்னை: பணமதிப்பு நீக்க சமயத்தில் இருந்ததை விட, புழக்கத்தில் உள்ள பணமும், மக்கள் கையில் வைத்திருக்கும் தொகையும் அதிகரித்திருக்கிறது. பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகான நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன
பண மதிப்பு நீக்கத்தின் போது 8.9 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.19.3 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. மக்களின் ரொக்க கையிருப்பும் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
வங்கிகளில் உள்ள சேமிப்பை தவிர்த்து பொதுமக்களிடம் உள்ள தொகை ரூ.18.5 லட்சம் கோடியாக இருக்கிறது. 2016ஆம் ஆண்டு இறுதியில் பொதுமக்கள் வசம் ரூ.7.8 லட்சம் கோடி மட்டுமே இருந்தது.
கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதனால் அஞ்சறைப் பெட்டியிலும் யாருக்கும் தெரியாமலும் சேமித்து வைத்திருந்த இல்லத்தரசிகள் தடுமாறித்தான் போயினர். வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்திருந்தனர்.
இதனையடுத்து மோடி அரசு அடுத்தடுத்த பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடு முழுவதும் ஒரே தேசம் ஒரே வரி என்ற கொள்கையுடன் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 99 சதவீத ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிக்கே திரும்பி வந்தன. இதனை தொடர்ந்து புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டது. ஆனால் எவ்வளவு தொகை திரும்பி வந்தது என்பது குறித்த முழுமையான அறிக்கையை இதுவரை ரிசர்வ் வங்கி சமர்ப்பிக்கவில்லை.
பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு கடந்த 2014 மே மாதம் பொதுமக்களிடம் உள்ள பணத்தின் அளவு ரூ.13 லட்சம் கோடியாக இருந்தது. அரசு பொறுப்பேற்ற பின்பு முதல் ஆண்டில் ரூ.14.5 லட்சம் கோடியாகவும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் ரூ.16.7 லட்சம் கோடியாகவும், 2016ஆம் ஆண்டு அக்டோபரில் ரூ.17 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.10 லட்சம் கோடியாகவும், 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.15 லட்சம் கோடியாகவும் இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. பல ஏடிஎம்கள் செயல்படவில்லை. இதனால் மீண்டும் பணமதிப்பு நீக்கம் ஏற்படலாம் என மக்களிடையே ஏற்பட்டிருந்த அச்சம் காரணமாகவே அதிக அளவிலான தொகையை ரொக்கமாக வைத்திருப்பதால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து ரூ.500 நோட்டுகளை அச்சடிக்கும் எண்ணிக்கையை அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின் போது 8.9 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.19.3 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. மக்களின் ரொக்க கையிருப்பும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. வங்கிகளில் உள்ள சேமிப்பை தவிர்த்து பொதுமக்களிடம் உள்ள தொகை ரூ.18.5 லட்சம் கோடியாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்கள் வசம் ரூ.7.8 லட்சம் கோடி மட்டுமே இருந்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்திரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டான 2015-16 ஆம் நிதியாண்டில் 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.