விலை வீழ்ச்சி எதிரொலி- கோதுமை இறக்குமதி மீதான சுங்க வரி 25 சதவீதமாக உயர்வு
டெல்லி: சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளை காப்பாற்றுவதற்காக, கோதுமை மீதான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று உயர்த்தியது.
உள்நாட்டில் கோதுமை உற்பத்தி அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் தரமான கோதுமை தேவையை காரணம் காட்டி அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதை தடுக்க கடந்த மாதம் அரசு 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக 10 சதவீத கோதுமை இறக்குமதி வரியை விதித்தது.
இருப்பினும் கோதுமை உற்பத்தியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வரியை 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டதுடன், வருவாய் துறையுடன் நடந்த ஆலோசனையில் இந்த வரி உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுங்க வரி உயர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை உயரும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.