உப்பளம், விவசாயிகள், மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கஜா புயல் - 2000 கோடி நஷ்டம்
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் ஆன நிலையிலும் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர் டெல்டா மாவட்ட மக்கள். உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.
தஞ்சாவூர்: நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று விட்டது. தென்னை மரங்கள் சாய்ந்ததில் விவசாயிகள் அடியோடு வீழ்ந்து போயுள்ளனர்.
கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்திற்கு மீன்கள் ஏற்றுமதி, உப்பு உற்பத்தி, மாங்காய், சவுக்கு, மல்லிகை, தென்னை என 2000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலின் காரணமாகத் தமிழகத்தில் மல்லிகைப் பூவின் உற்பத்தி வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதனால் மல்லிகைப் பூவின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
காவிரியின் கடைமடைப் பகுதியான வேதாரண்யத்தில் மீன்பிடித் தொழில், உப்பளம், மட்டுமின்றி மல்லிகைப் பூ சாகுபடியும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள விளையும் பூக்கள், தஞ்சை, திருவாரூர் எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.
கஜா புயலின் தாண்டாவத்திற்கு சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது மல்லிகை செடிகள். மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் உற்பத்தியாளருக்கும், அந்தத் தொழிலை நம்பி வாழ்ந்துவரும் கூலி விவசாயிகளுக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மல்லிகைப் பூவின் உற்பத்திப் பற்றாக்குறையால் தமிழகத்தில் மல்லிகைப் பூவின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உப்பளத் தொழிலில் முன்னணி வகிக்கும் வேதாரண்யம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குப் பெருமளவில் உப்பு அனுப்பப்பட்டு வந்தது. கஜா புயலின் காரணமாக வேதாரண்யம் பலத்த சேதமடைந்திருப்பதால் உப்பளங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. கஜா புயல் பாதிப்பால் இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புயலின் காரணமாக சென்ற வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது போக மீதமிருந்த 1.75 லட்சம் டன் உப்பு புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட இப்பாதிப்புகளைச் சரி செய்வதற்கான முதலீட்டுக்கு போதுமான பொருளாதாரம் உற்பத்தியாளர்களிடம் இல்லை. பிப்ரவரியில் தொடங்கப்பட வேண்டிய உற்பத்தி தாமதமானால் 2019ஆம் ஆண்டுக்கான உப்பு உற்பத்தியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும். கஜா புயல் பாதிப்பால் இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.