இந்த 500, 1000 ரூபாய் நோட்டு இருந்தால் டிச. 31ம் தேதிக்குள்ள மாத்திருங்க.. இல்லாட்டி செல்லாது!
டெல்லி: பிறக்க இருக்கின்ற புத்தாண்டான ஜனவரி 1, 2015 முதல், 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த அதிரடி திட்டத்தை அறிவித்தது.
2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதியது ரிசர்வ் வங்கி.
கடந்த வருட உத்தரவு:
இதனால் 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
எப்படி தெரிந்து கொள்வது?:
ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது. இதை வைத்து 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
முடிவடையும் கெடு:
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள 2005 ஆம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற தொடங்கினார்கள்.
சீக்கிரம் மாற்றுங்கள்:
இப்படி மாற்றுவதற்கான காலக்கெடு வரும் ஜனவரி 1 ஆம் தேதியுடன் முடிகிறது.எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கெடு முடிவதற்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதுவரை எவ்வளவு?:
இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் 52 ஆயிரத்து 855 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்துள்ளது.
கோடிக் கணக்கில் மாற்றம்:
இதே போன்று ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூபாய் 73.2 கோடி மதிப்பிலான ரூபாய் 100 நோட்டுகளையும், ரூபாய் 51.85 கோடி மதிப்பிலான ரூபாய் 500 நோட்டுகளையும், ரூபாய் 19.61 கோடி மதிப்பிலான ரூபாய் 1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.