ரூபாய் நோட்டு தடை - ஹீரோ மோட்டார் விற்பனை சரிவு - புதிய ஆலை தொடக்கம் ஒத்திவைப்பு
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தால், ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் குஜராத்தில் தொடங்கத் திட்டமிட்ட தங்களுடைய புதிய அதி நவீன ஆலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டெல்லி : இந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக உள்ளது ஹீரோ மோட்டார் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது.
ஹீரோ மோட்டார் நிறுவனம் தன்னுடைய இருசக்கர வாகன தொழிற்சாலைகளை ஹரியானவிலுள்ள குர்கான் மற்றும் தாருஹெராவிலும், மூன்றாவது தொழிற்சாலையை ஹரித்துவாரிலும். நான்காவது நவீன ஹீரோ கார்டன் தொழிற்சாலையை ராஜஸ்தானிலுள்ள நீம்ரான் என்ற இடத்திலும் அமைத்துள்ளன.
இந்த நான்கு தொழிற்சாலைகளின் மூலம் ஏராளமான இருசக்கர வாகனங்களையும் உதிரிப்பாகங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.
இந்நிலையில், ஹீரோ மோட்டார் நிறுவனம், உற்பத்தியை பெருக்கும் நோக்கில், சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன இரு சக்கர வாகன தொழிற்சாலையை குஜராத்தில் இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கத் திட்டமிட்டிருந்தது.
இந்த ஆலை நிறுவப்பட்டால் இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 18 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இது இரு சக்கர வாகன விற்பனையிலும் எதிரொலித்தது. இதன் தாக்கமானது, இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டார் நிறுவனத்திலும் எதிரொலித்தது.
இதனால், கடந்த இரண்டு மாதங்களில் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை சுமார் 23 சதவிகிதம் குறைந்து விற்பனை கடுமையாக சரிவடைந்தது. இதன் காரணமாக, சுமார் 3,500 கோடி ரூபாய் செலவில் தொடங்கத் திட்டமிட்டிருந்த புதிய ஆலையை இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2,400 கோடி ரூபாய் செலவில் வருடத்திற்கு சுமார் 18 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யுத் திறன் கொண்ட ஆலையை நிறுவ ஹீரோ மோட்டார் நிறுவனம் திட்டமிட்டிருந்து. ஆனால், ஹீரோ மோட்டார் நிறுவனம் தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை ஆந்திர அரசிடம் இருந்து இன்னும் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரி உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாடு முழவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் தாக்கம் இரு சக்கர வாகன விற்பனையிலும் எதிரொலிக்கின்றது என்று கூறியுள்ளார்.