பணமதிப்பு நீக்கம் ஏன் எப்படி எதற்கு - நிதி ஆயோக் துணைத்தலைவர் விளக்கம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பின் தாக்கம் நிலையற்றது எனவும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது ஊழலுக்கெதிரானது என்றும் பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர். அப்போது இது குறித்து மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு முன்பே திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.
விமர்சித்த அரவிந்த் சுப்ரமணியன்
இந்த நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன், மோடி - ஜெட்லி பொருளாதாரத்தின் சவால்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் பணமதிப்பு நீக்கம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதில், பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது. இது மிகப்பெரிய, கொடுமையான நிதி அதிர்ச்சி. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் மிக வேகமான சரிவை சந்தித்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முந்தைய 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த 7 காலாண்டுகளில் இந்த வளர்ச்சி சராசரி 6.8 சதவீதமாக குறைந்து விட்டது.
பணமதிப்பு நீக்கத்தால் பாதிப்பு
பணமதிப்பு நீக்கம் என்ற பெரிய அதிர்ச்சி காரணமாக அமைப்பு சாராத தொழில்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் வேறு வழியின்றி மின்னணு பரிமாற்றத்துக்கு மாறினர். ஜிஎஸ்டி நடைமுறை, கச்சா எண்ணெய் விலை, வட்டி விகிதம் ஆகியவையும் பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.
பதுக்கி வைக்கப்பட்ட பணம்
இந்த சூழ்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது ஊழலுக்கெதிராக, பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பு நீக்கம் பொருளாதார அதிர்ச்சி நடவடிக்கை என முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக இக்கருத்தை ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பண ஒழிப்பு
அர்விந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளபடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேல்தட்டு மக்களுக்கெதிராக எடுக்கப்பட்டது அல்ல. ஆனால் அவர் என்ன காரணத்துக்காக மேல் தட்டு மக்கள் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தினார் என்பது புரியவில்லை.
இந்த நடவடிக்கையானது ஊழலுக்கெதிராக, பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். ஊழல்வாதிகளை மேல் தட்டு மக்கள் என அர்விந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டிருக்க மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் நேர்மையான, கடின உழைப்பாளி, சட்டத்தை மதிக்கக் கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.