செல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி
செல்லாத ரூபாய் நோட்டுக்களை முழுவதுமாக எண்ணி முடித்த உடன் துண்டு துண்டாக வெட்டுவோம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல்லி: பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட செல்லாதாக 500 மற்றும் 1000 நோட்டுக்கள் அனைத்தும் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் மோடியால் உயர் மதிப்புடைய 500 மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு நாட்டில் உள்ள அனைவருக்கும் 2016ம் ஆண்டு டிசம்பர் இறுதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்கம்
செல்லாததாக அறிவிக்கப்பட்ட 99 சதவிகித 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டன. ரிசர்வ் வங்கி கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தமுள்ள 15.44 லட்சம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுக்களில் சுமார் 16050 கோடி ரூபாய் மதிப்புடைய நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி செலுத்தப்படவில்லை, என்று தெரிவித்துள்ளது.
15.28 லட்சம் கோடி ரூபாய்
ரிசர்வ் வங்கி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட தன்னுடைய ஆண்டறிக்கையில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட உயர் மதிப்புடைய 500 மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்களில் இதுவரையிலும் சுமார் 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கேள்வி
ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்ட செல்லாத நோட்டுக்கள் அனைத்தும் என்ன செய்யப்படும் அல்லது எப்படி அழிக்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. ஒருவேளை திரும்பவும் புதிதாக 1000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்படுமா? என்று கேள்வியும் எழுப்பப்பட்டன.
அதிநவீன இயந்திரங்கள்
ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்ட செல்லாத 500 மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்களின் நிலை என்ன? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய ரிசர்வ் வங்கி, செல்லாத நோட்டுக்கள் அனைத்தும், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளில் உள்ள 59 அதிநவீன ரூபாய் நோட்டுக்கள் எண்ணும் இயந்திரங்களின் மூலம் எண்ணிக்கை மற்றும் துல்லியத்திற்காக பரிசோதனை செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
15.44 லட்சம் கோடி
இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் அவை அனைத்தும் துண்டு துண்டாக வெட்டி அழிக்கப்படும், என்று தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அன்று செல்லாததாக அறிவிக்கப்படும் வரையிலும் சுமார் 1716.5 கோடி 500 ரூபாய் நோட்டுக்களும். 685.8 கோடி 1000 ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்து மொத்தத்தில் சுமார் 15.44 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் புழக்கத்தில் இருந்தது என்று மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.