கறுப்பு பணம்... கவுண்டவுன் ஸ்டார்ட் - வருமானவரித்துறை இறுதி எச்சரிக்கை
கறுப்பு பணம் வைத்திருப்போர் தொடர்பான தகவலை தானே முன்வந்து அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் வருந்தத் தக்க பின்விளைவு நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி: கருப்பு பணத்தை பற்றி மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு இறுதி எச்சரி்க்கை விடுக்கும் வகையில் வருமான வரித்துறை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள முன்னணி நாளிதழ்களில் வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சட்ட விரோத டெபாசிட்
கவுண்டவுன் துவங்கி விட்டது. கறுப்பு பணம் வைத்திருப்போர் தங்களின் சட்டவிரோத டெபாசிட்கள் பற்றிய தகவலை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா' வின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் அளிக்காவிட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டி இருக்கும்.
மார்ச் 31 கடைசி நாள்
உங்களின் கறுப்பு பணம் டிபாசிட் குறித்த விபரங்கள் வருமான வரித்துறையிடம் உள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்போர் அளிக்கும் சொத்து மற்றும் முதலீடு விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அரசு அறிவித்துள்ள கால கெடுவுக்குள் பிரதம மந்திரியின், கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் விவரங்களையும், கருப்பு பணத்தையும் ஒப்படைக்க வேண்டுமென்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
அபராதம் எவ்வளவு
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கறுப்பு பணம் விபரங்களை அளிப்பவர்களிடம் 49.9 சதவீதம் வருமான வரி மட்டும் வசூலிக்கப்பட்டும். அப்படி தகவல் ஒப்படைக்காதவர்களிடம் இருந்து வருமான வரியுடன், 77.25 சதவீதம் அபராதமும் வசூலிக்கப்படும்.
கறுப்பை வெள்ளையாக்குங்க
இத்திட்டத்தின் கீழ் வங்கியில், 50% வரி மற்றும் அபராதம் செலுத்தி பணத்தை வெள்ளையாக்கி கொள்ளலாம் என்றும், மொத்தம் தொகையில் 25%, 4 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியில்லா தொகையாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
பினாமி சட்டப்படி நடவடிக்கை
இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்காமல் வருமான வரி தாக்கலின் போது தெரிவித்தால் 77.25% அபராத வரியாக செலுத்த வேண்டும். இதுவே வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால் 107.25%-ல் இருந்து அதிகபட்சமாக 137.25% செலுத்த வேண்டியிருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இல்லையெனில் பினாமி சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.