தீபாவளி : நெருங்கும் தன திரயோதசி தங்க நகைகள் விலை உயர்வு
தனதிரயோதசி நாளில் வாங்கும் பொருட்கள் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. தீபாவளிக்கு முதல் நாளில் தனதிரயோதசி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மதுரை: அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனதிரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது
நம்பிக்கையாக உள்ளது. தன திரயோதசிக்கு இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் தங்க நகைகளின் விலை அதிகரித்துள்ளது.
தனதிரயோதசி நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். பங்குச்சந்தைகளிலும் முதலீடுகள் செய்யலாம்.
பாற்கடலில் இருந்து அமிர்தம் வேண்டி கடைந்த போது அனைத்து செல்வங்களுடன் லட்சுமி தேவி அவதரித்தார். அதே நாளில்தான் தன்வந்திரி பகவானும் அவதரித்தார்.
தன திரயோதசி
தீபாவளிக்கு முதல் நாள் வரும் இந்தப் பண்டிகையை சின்ன தீபாவளி என்றே அவர்கள் அழைப்பார்கள். தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வீட்டுக்குத் தேவையான சமையல் சாமான்கள் வாங்குவார்கள்.
தனம் தரும் பூஜை
தன திரயோதசி தினத்தன்று விரதம் இருந்து தெற்கு நோக்கி விளக்கேற்றி தனலட்சுமி பூஜையும் செல்வங்களைப் பரப்பி குபேர பூஜையும் செய்வது வட இந்தியர்களிடையே காலங்காலமாகத் தொடரும் வழக்கம். மருத்துவ கடவுள் என அழைக்கப்படுகிற தன்வந்திரி அவதரித்த நாள் இது. மருத்துவ கண்டுபிடிப்புகளையும் புதிய மருத்துவமனை திறப்புகளையும் கூட அந்த நாளில் வைத்துக் கொள்வதையே பலரும் விரும்புகிறார்கள்.
புதுக்கணக்கு பூஜை
அனைத்து வட இந்திய வியாபாரிகளும், தங்கம், வெள்ளி, வைரம் விற்போர், பாத்திரம் விற்போர் அந்த நாளன்று லட்சுமி படத்தை வைத்து புதுக் கணக்கு போடுவதுபோல கணக்குப் புத்தகங்களை வைத்து அதன் மீது தங்கக் காசுகளைப் பரப்பி, அதன் மேல் வெள்ளிக் காசுகளை வைத்து, இனிப்புகள் வைத்து வியாபார இடங்களில் பூஜை செய்வார்கள். பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வார்கள்.
தீபாவளி சீசனில் நகை விலை
கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ரூபாய் மதிப்பில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. திருமணம் மற்றும் தீபாவளி சீசன் தொடங்கியுள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் 25000 ரூபாயை எட்டலாம் என்று எதிர்பார்ப்பதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.