பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்
தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது குறித்து மறு ஆலோசனை செய்யப்படமாட்டாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
டெல்லி: மாநில அரசுகள் நியாயமாகவும், பொறுப்பாகவும் பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் எண்ணெய் விலையிலிருந்து பெரும் செல்வத்தை ஈட்ட மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது.
பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுவதை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூறிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நீண்ட கால தீர்வு குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் குறித்து மறு ஆலோசனை செய்யப்படமாட்டாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாங்கள் வருந்துகிறோம்.
இந்த விவகாரத்துக்கு நீண்ட கால தீர்வைக் காண நாங்கள் முயன்று வருகிறோம். ஐந்து நாட்களாக எண்ணெய் விலை குறைந்து வந்தாலும் கூட, விலைகள் வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மாநில அரசுகள் நியாயமாகவும், பொறுப்பாகவும் பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்க வேண்டும். அதிகரித்து வரும் எண்ணெய் விலையிலிருந்து பெரும் செல்வத்தை ஈட்ட மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது. இந்த விவகாரம் குறித்து முழுமையான தீர்வு காண இந்திய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியில் ஒரு ரூபாயைக் கேரள மாநில அரசு குறைத்தது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, கேரள அரசின் முயற்சிக்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களிடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருவதால், பல மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராக்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் இந்த முறையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில் மாநில அரசுகளின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள மத்திய அரசு முயன்று வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை 14 பைசா குறைந்து ரூ. 80.80 ஆகவும், டீசல் விலை 10 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.72.72 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே. கார், இருசக்கர வாகனங்களை விடுத்து இனி கால்நடைக்கு பழகிக் கொண்டால் மட்டுமே கழுத்தை நெறிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.