உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை... இன்று வரலாற்றில் புதிய உச்சம்!
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களைக் கண்டு வரும் நிலையில் இன்றும் விலை உயர்வில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Recommended Video
சென்னை: சில்லறை விலையில் டீசலின் விலையானது இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல், ரூ. 65.31ஆகவும், மும்பையில் ரூ. 69.54ஆகவும், சென்னையில் ரூ. 68. 90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலின் விலையும் 55 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுளள் தகவலின்படி சில்லறை விலையில் டெல்லியில் பெட்ரோல் ரூ. 74.08 க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 2013ல் இருந்த அதிகபட்ச விலையை தாண்டியுள்ளது.
2014ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே வருகிறது, தேவைக்கும் விநியோகத்திற்கும் இருக்கும் இடைவெளியால் விலை உயர்வானது அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வரை முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை 50 பைசாவும், டீசலின் விலை 90 பைசாவும் அதிகரித்திருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ. 4ம், டீசலின் விலையானது லிட்டருக்கு ரூ. 5 - 6 எனவும் உயர்ந்தது.
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசை குற்றம்சாட்டியுள்ளார். 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டாட்டத்தில் பாஜக
கடந்த 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பெட்ரோல்,டீசல் விலை புதிய புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. விலையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் பாஜக திண்டாடி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைக்குக் கூட தெரியும் மக்கள் மீது பாஜக அரசு சுமத்தப்படும் வரியே விலை உயர்வுக்குக் காரணம் என்று ப. சிதம்பரம் தன்னுடைய ட்வீட்டில் கூறியுள்ளார்.
4 ஆண்டுகள் ஓடிவிட்டது
கச்சா எண்ணெய் விலை 2014-ல் $ 104. இன்று $ 74. ஏன் 2014-ல் இருந்த விலைகளை விட இன்று பெட்ரோல், டீசல் விலைகள் அதிகமாக உள்ளன? இதற்கு மத்திய அரசின் கசக்கிப் பிழியும் கலால் வரி தான் காரணம் என்று பள்ளி மாணவருக்குக் கூடத் தெரியும்.குறைந்த விலையில் கச்சா எண்ணெய் என்ற ஆதாயத்தை நம்பியே மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்டது.
ஜிஎஸ்டி கீழ் கொண்டுவரவில்லையே
22 மாநிலங்களை ஆளுகிறோம் என்று பீற்றிக் கொள்பவர்கள் பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வர ஏன் மறுக்கிறார்கள்? கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் மத்திய அரசு என்ன செய்யும்? மேலும் மக்களைக் கசக்கிப் பிழியும். இந்த அரசுக்கு வேறு வழி தெரியாது என்றும் ப.சிதம்பரம் ட்வீட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயருமா?
கடந்த ஜூன் மாதம் முதல் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கத் தொடங்கியது முதலே விலை கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டே தான் போகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் டீசலின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் சில்லறை விலையில் ரூ. 68.90 காசுகளுக்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 76.85 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப்பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காய்கறி, பழம் மற்றும் சரக்கு வாகனங்கள் டீசல் விலையை சரிகட்ட கட்டணங்களை அதிகரிக்கக் கூடும் என்பதால் இந்த கட்டண உயர்வு பொருட்களின் விலையில் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.