7 ஆண்டுகளில் முதல் முறையாக டீசல் விலை குறைகிறது.. கச்சா எண்ணெய் விலை சரிவால்!
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளதையடுத்து, இந்தியாவில் டீசல் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல் முறையாக டீசல் விலை குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 99.59 டாலராக குறைந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெய் 100 டாலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 6,042 ரூபாய் ஆகும்.
இந்தியாவில் தற்போது டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் 4.41 பைசா அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பின் அளவு கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பயனை நுகர்வோருக்கு வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 15 ஆம் தேதியன்று விலை குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதும் விலை குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவதால் இதன் விலையும் குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. ஆனால் டீசல் விலைக் கட்டுப்பாடு மத்திய அரசிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.