தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போறீங்களா? இன்னையில இருந்து டிக்கட் ரிசர்வ் பண்ணுங்க!
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலையில் தொடங்கியது. நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணிப்பதற்கான முன்பதிவு இன்று முடிந்துள்ளது.
Recommended Video
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களும் இன்று முதல் டிக்கெட் ரிசர்வேசன் செய்யலாம். நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணிப்பதற்கான ரிசர்வேசன் இன்று காலை தொடங்கியது. ஏராளமானோர் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.
நவம்பர் மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்பவர்கள் ஆன்லைன் மூலமும், டிக்கெட் கவுண்டர்களுக்கு சென்றும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் படிக்கவும், வேலை செய்யவும் சென்னையில் குடியேறி உள்ளனர். தீபாவளி, பொங்கல் பண்டிகையை உறவினர்களுடனும், சொந்தங்களுடனும் கொண்டாட அனைவரும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பேருந்து கட்டணம் அதிகம் என்பதால் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பது வழக்கம்.
ரயில்களில் பயணம் செய்ய விரும்புவர்கள் தங்கள் பயணத்தேதி முன்பே திட்டமிடப்பட்டிருந்தால், அவர்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நடைமுறைப்படி பார்த்தால், இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை, நவம்பர் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் சிலர் வெள்ளிக்கிழமையே, தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அவர்கள் ஜூலை 5ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 3ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் நாளை ஜூலை 6ஆம் தேதியும், நவம்பர் 4ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பவர்கள் ஜூலை 7ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் ரயில்வே நிர்வாகம் முன்பதிவை தொடங்கும் நாளில் முன்பதிவு செய்து விடுகின்றனர். தற்போது, பெரும்பாலானோர் கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன் வைத்திருப்பதால், முன்பதிவு தொடங்கியதுமே ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகின்றனர். முன்பெல்லாம் தீபாவளிக்கு டிக்கெட் எடுக்க காலை 5 மணியில் இருந்தே கவுண்டர்கள் காத்திருப்பார்கள். ஆனாலும் பாதிபேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வார்கள். இப்போதோ யாரும் காத்திருப்பது இல்லை ஆன்-லைன் மூலமாக டிக்கெட்டுகளை புக் செய்து விடுகின்றனர். இதனால் காத்திருப்பு மிச்சமாகிறது. கால விரயமும் தவிர்க்கப்படுகிறது என்பது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்பவர்களின் கருத்து.
ஆன்லைனில் ரிசர்வேசன் செய்ய முடியாதவர்கள், இந்த வசதி இல்லாதோர், ரயில் நிலையம் சென்று முன்பதிவு செய்கின்றனர். இன்றைக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடன் ஆர்வத்துடன் பலரும் முன்பதிவு செய்தனர்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலை பார்த்து, தேவை ஏற்பட்டால், முக்கிய நகரங்களுக்கு இடையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.