போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிர்பலியானால் இனி 7 ஆண்டுகள் சிறை
குடித்து விட்டு வாகனம் ஓட்டி மரணம் ஏற்பட்டால் அதற்கான சிறைத்தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: குடிபோதை ஆசாமிகள் வாகனம் ஓட்டி மரணம் ஏற்பட்டால் இனி கொலையாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. சென்னையில் இதுபோன்ற விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இனி குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டுவர ஆய்வு செய்வதற்காக வினய்.பி.சகஸ்ரபுத்தே தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது பல முக்கிய பரிந்துரைகளை மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், அவற்றை புதுப்பிப்பதற்கு (License Renewal) காலாவதி தேதிக்கு முன்பும் பின்பும் ஆறுமாதம் வரை அனுமதி அளிக்கலாம். அது போலவே, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சிறைத்தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தலாம்.
புதிய வாகனங்களை விற்பனை செய்யும் முகவர்களின் இடத்திலேயே (Show Room) பதிவு செய்யலாம். இதனால் வாகனத்தை பதிவு செய்வதல் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும்.
போக்குவரத்து போலீசார் அணியும் உடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தலாம். இவற்றை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்துகொண்டு கண்காணிக்கலாம். இதனால் லஞ்ச ஊழல் குற்றங்கள் குறையும்.
நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தேவையான சட்டவிதிகளை அமல்படுத்தலாம்.
500 கிமீக்கு மேற்பட்ட தூரங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களில் இரு ஓட்டுநர்கள் கட்டாயம் இருக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யலாம். அதுபோலவே, வாகன போக்குவரத்தை கண்காணிக்க ஸ்பீடு கேமாரா, சிசிடிவி ஸ்பிடு கேமரா மற்றும் ஸ்பீடு கன், உடலில் அணியும் கேமராக்களை பயன்படுத்தலாம்.
இந்தக்குழுவின் பரிந்துரைகள் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் சட்ட வடிவம் பெறும்போது கூட்டாட்சித் தத்துவம் மேலும் வலுப்பெறும். இவ்வாறு அந்தக் குழுவானது தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதெல்லாம் சரிதான். எல்லா டாக்குமென்டும் சரியா இருந்தாலும், ஏதாவது ஒரு நொட்டையை கண்டுபிடித்து எப்படியாவது பணத்தை புடுங்கவேண்டும் என்று நினைக்கும் போக்குவரத்து போலீசாரை தண்டிக்க என்ன சட்டம் கொண்டுவருவது என்று வாகன ஓட்டுநர்கள் முணுமுணுப்பது மத்திய அரசின் காதில் விழுமா?