இ-வே பில் ஏப்.1 முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்- மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மாநிலங்களுக்கு இடையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பெரும் துணையாக இருக்கும் இ-வே பில் நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி ஆணையம் அறிவித்தது போலவே, ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இ-வே பில் அல்லது முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும் என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி முறைக்கு முன்பு இருந்த வாட் வரி விதிப்பு முறையில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு பாஃர்ம் எஃப் (Form F) என்னும் ஆவணமும், சில குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் கொண்டுசெல்வதற்கு வே-பில் என்னும் ஆவணமும் பயன்படுத்தப்பட்டது. இதனால் சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் எந்தவிதமான நடைமுறைச் சிக்கல்களும் எழுந்ததில்லை.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் சரக்குகளை ஓர் இடத்தில் இருந்தோ, ஒரு மாநிலத்தில் இருந்தோ வேறொரு இடத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கு தேவையான மிக முக்கிய சரக்கு பரிமாற்ற ஆவணமான வே-பில் என்னும் ஆவணம் பற்றிய எந்த ஒரு விதி முறையும் அமல்படுத்தப்படவில்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சரக்கு பரிமாற்றத்திற்கு எந்தவிதமான வழிமுறையும் தெரிவிக்கப்படாததால் தொழில் துறையினரும், வர்த்தகர்களும் குழப்பத்தில் தவித்தனர். இதனால் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டவுடன் அனைவரும் சரக்குகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.
தொழில் துறையினர் மற்றம் வர்த்தகர்களின் குழப்பத்தை போக்கும் விதத்தில், சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை என்றும், சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் (E-Way Bill) என்னும் இணையதள செயலி தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் பரிசோதனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும், ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்தது.
ஜிஎஸ்டி ஆணையம் இ-வே பில் முறையை அமல்படுத்துவதற்கு முன்பே கர்நாடக மாநிலம், தங்களின் மாநிலங்களுக்குள் சரக்கு பரிமாற்றத்திற்கு இ-வே பில் முறையை கடந்த செப்டம்பர் மாதம் முதலே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது. அதுபோலவே, வாட் வரி விதிப்பு முறையில் இ-சுகம் என்னும் முறையை முதன் முதலில் பயன்படுத்திய மாநிலம் கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி ஆணையம் உறுதியளித்தது போலவே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பரிசோதனை முயற்சியாக இ-வே பில் முறை அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் சரக்கு போக்குவரத்திற்கு பரிசோதனை முயற்சியாக அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஒரே சமயத்தில் ஜிஎஸ்டி இணைய தளத்தில் இ-வே பில் முறையைப் பயன்படுத்த முற்பட்டதால் இணையதளம் முடங்கியது.
இறுதியில் ஜிஎஸ்டி ஆணையம் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மாநிலங்களுக்குள் சரக்குகளை கொண்டு செல்வதற்கு இ-வே பில் கட்டாயம் என்றும் மாநிலத்தில் ஓர் இடத்தில் இருந்த மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ஏப்ரல் 15ம் தேதி முதல் இ-வே பில் முறை கட்டாயம் என்றும் அறிவித்தது.
ஜிஎஸ்டி ஆணையம் அறிவித்தது போலவே, ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அனைத்து தொழில் துறையினரும், வர்த்தகர்களும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது கண்டிப்பாக இ-வே பில் படிவத்தையும் கொண்டு செல்லவேண்டும் என்பது கட்டாயமாகும். இ-வே பில் அல்லது முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இ-வே பில் முறையை பயன்படுத்துவதற்கு முதலில் அனைத்து தொழில் துறையினரும், வர்த்தகர்களும் தங்களின் ஜிஎஸ்டி எண்ணை இ-வே பில் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். கடந்த வாரம் வரையிலும் 11 லட்சம் தொழில் துறையினரும், வர்த்தகர்களும் இ-வே பில் இணையதளத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர். ஆயினும், ஜிஎஸ்டி ஆணையத்தில் சுமார் 1.05 கோடி தொழில் துறையினரும் வர்த்தகர்களும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இ-வே பில் இணையதளம் தற்போது முற்றிலும் புதுமைப்படுத்தப்பட்டு, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவிதமான தடங்களும் இல்லாமல், ஒரு நாளைக்கு நாடு முழுவதும் 75 லட்சம் ஈ.வே பில்லை பதிவிறக்கம் செய்யமுடியும்.