நாடு முழுவதும் ஏப். 1 முதல் இ வே பில் - நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரை
ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும் என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும் என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும். அதாவது, ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ அல்லது 10 கி.மீ தொலைவுகூட அனுப்பினாலோ, ஜிஎஸ்டிஎன் போர்டலில் சென்று இ-வே பில்லை உருவாக்க வேண்டும்.
அதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும்.
ரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்.
சரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும்.
இ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமின்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.
இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்.
துறைமுகம், விமான நிலையம், ஏர் கார்கோ நிலையம், சுங்கவரி அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் போது பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.
ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்த வாட் வரி விதிப்பு முறையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு ஜே.ஜே என்னும் படிவத்தையும், கூடவே சரக்குகளுக்கான பட்டியலையும் (Stock Transfer Note) அனுப்பும் நடைமுறையை கையாண்டுவந்தனர். சில மாநிலங்கள் தங்களின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட கிளைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு இ-சுகம் (E-Sugam) என்னும் படிவத்தையும் பயன்படுத்தி வந்தனர். இதனால், சரக்கு பரிமாற்ற முறையில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் இருந்து வந்தது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநில கிளைகளுக்கு சரக்குகளை கொண்டுசெல்வதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. மின்னணு ரசீது என்னும் ஈ-வே பில் (E-Way Bill) அவசியம் என்று ஜிஎஸ்டி ஆணையம் வலியுறுத்தி வந்தாலும், ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் நிலவிய தொழில்நுட்ப பிரச்சினைகளால், வரும் மார்ச் மாதம் வரையிலும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு எந்தவிதமான கெடுபிடியும் காட்டப்படாது என்று உறுதி அளித்தனர்.
ஜிஎஸ்டியின் படி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும்போது, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-வே பில் இருக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பிப்ரவரி முதல் அமலாகும் என அறிவிக்கப் பட்டது. இதற்கான முன்னோட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இப்போது இந்த முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில நிதியமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று அதன் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான சுஷில் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில், 'ரூ.50,000க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல படிப்படியாக அனுமதிக்க வேண்டும் என முடிவானது. இதை மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து குறித்து மதிப்பீடு செய்த பிறகு அமல்படுத்த வேண்டும். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்னணு இ-வே பில் முறை அமல்படுத்தப்பட வேண்டும்' என இக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும் என சுஷில் மோடி தெரிவித்தார்.
இ-வே நடைமுறைக்கு வந்தால்,வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு அரசின் வருவாய் 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றார்.
சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் இணைய தளத்தில் இருந்து இ-வே பில்லை பெறலாம். ரூ.50,000க்கு அதிகமான பொருட்களை இ-வே பில் இல்லாமல் பதிவு செய்தவர்கள் கொண்டு செல்ல முடியாது. இ-வே பில்லை எஸ்எம்எஸ் மூலமும் பெற முடியும்; ரத்து செய்யவும் முடியும். இ-வே உருவாக்கப்படும் போது, பிரத்யேக எண் ஒதுக்கப்படும். இது பொருட்களை விற்பவர், வாங்குபவர் மற்றும் சரக்கு கையாளும் முகமைக்கு தரப்படும்.