எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 77வது இடம் - உலக வங்கி
எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா அதிரடியாக 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்கலாம் அதற்கான சிறப்பம்சங்கள் உள்ளன என்று உலக வங்கியின் அறிக்கை சொல்கிறது. உலக நாடுகளின் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களைப் பொறுத்து அந்நாடுகளுக்கான பட்டியலை உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக வங்கியின் பட்டியலில் 77வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
தெற்காசியாவிலேயே இப்பட்டியலில் மிகப் பெரிய முன்னிலையை இந்தியா மட்டுமே கண்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அதே ஆண்டு அக்டோபர் இறுதியில் உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் 142வது இடத்தில் இந்தியா இருந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அறிமுகம் செய்திருந்த நேரத்தில் இந்த பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இப்படி இதற்கான காரணம் என்ன என்று அலசப்பட்டது.
2016ஆம் ஆண்டு 130வது இடத்தையும் இந்தியா பெற்றது. அப்போதும் சாதகமற்ற அம்சங்கள் பற்றி ஆராயப்பட்டன. சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டன. அதே ஆண்டுதான் உயர்மதிப்புடைய 1000,500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.
ஜிஎஸ்டி வரி
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2017ஆண்டுக்கான பட்டியலில் 100ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இந்த ஆண்டில் 23 இடங்கள் முன்னேறி 77ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
சீர்திருத்தங்களினால் முன்னேற்றம்
கடந்த 2 ஆண்டுகளில் 53 இடங்கள் முன்னேறியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டியில் இருந்து ஆசியாவில் வேறு எந்த நாடும் இத்தகைய சாதனையை செய்திருக்கவில்லை என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆறு சீர்திருத்தங்களை இந்தியா இந்த ஆண்டில் மேற்கொண்டதாகவும், இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிக முன்னேற்றம் கண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
பாஜக அரசின் சீர்திருத்தம்
2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் புளூம்பெர்க் ஆய்வு கூறுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி, ரியல் எஸ்டேட் சட்டம், வங்கி திவால் சட்டம் போன்றவை இந்த முன்னேற்றத்திற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது
பொருளாதார வளர்ச்சி
பிரதமர் மோடி அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் உலக வங்கியின் அறிக்கை ஆளும் பாஜக அரசுக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. இதே தெம்போடு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, இது மிகப்பெரிய முன்னேற்றம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
முன்னேற்றம் தேவை
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சொத்துகளைப் பதிவுசெய்வதற்கு ஆகும் காலம், தொழில் தொடங்குவது, திவால் மற்றும் வரி முறை, ஒப்பந்தங்கள் போன்றவற்றில் இன்னும் முன்னேற்றம் தேவை என்றார். இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதன் பயன்களை எதிர்காலத்தில் நம்மால் காண முடியும் என்றும் கூறினார்.
இலக்கை அடைவோம்
எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் 50 இடங்களுக்குள் முன்னேறுவதே நமது அரசின் இலக்காகும். மேற்கூறிய அம்சங்களில் அதிகக் கவனம் செலுத்தி, தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தினால் இலக்கை அடைவது எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
முதல் 30 இடங்களில் இந்தியா
அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தியா கண்டுள்ள இந்த முன்னேற்றம் மோடி அரசுக்கு ஆதரவானதாக உள்ளது.
பிரதமர் மோடி தனது பேட்டியில் 2014 ஆம் நாம் ஆட்சிக்கு வந்த போது உலக வங்கியின் பட்டியலில் 142வது இடத்தில் இருந்தோம், இப்போது இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள் முதல் 30 இடங்களில் இந்தியா இடம் பெறும் கூறியுள்ளார்.