இப்பவே இப்படீன்னா.. அரசியல் சூழல் மேம்பட்டால் தமிழகம் மேலும் உயரும்!
தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 15ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
டெல்லி: தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அண்டை மாநிலமான தெலுங்கானா 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலை கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அரசு வெளியிடுவது வழக்கம்.
கடந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையானது உலக வங்கியின் துணையுடன் வெளியிட்டது. இதில் பல்வேறு காரணிகள், சிறப்பம்சங்கள், சாதக பாதக அம்சங்கள் என 372 அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தொழிற்சாலை தொடங்கலாம்
தொழில் தொடங்குவதற்கு தேவையான தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் அம்சங்கள், தொழிற்சாலையை பதிவு செய்வதற்கான பத்திரப் பதிவு அம்சங்கள், தொழிற்சாலையை தொடங்குவதற்கான அனுமதியை பெறுவதில் ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படுகிறதா இல்லையா? தொழிற்சாலை கட்டுவதற்கு ஆய்வுகள் முறையாக விரைவாக நடத்தப்படுகிறதா என 78 காரணிகள் முன்வைக்கப்பட்டன.
ஆந்திரா, தெலுங்கானா
மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான மாநிலங்களின் பட்டியலை மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை நேற்று (ஜூலை 10) வெளியிட்டது. இவற்றில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலமாக மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி ஆந்திரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அண்டை மாநிலமான தெலுங்கான 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் ஆந்திராவும் தெலுங்கானவும் இணைந்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு 15வது இடம்
தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது மற்றம் நான்காவது இடங்களை முறையே ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்கள் பிடித்துள்ளன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் ஐந்தாவது இடத்தையே பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 15வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் தமிழகம் 18வது இடத்தில் இருந்தது தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையையும் தாண்டி சற்று முன்னேறியுள்ளது.
டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு
இந்தப் பட்டியலில் தலைநகர் டெல்லி 23வது இடத்தையே பிடித்துள்ளது. டெல்லியில் நிலவிவரும் கடுமையான சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றினால் தொழில் தொடங்குவதற்கு அதிக கெடுபிடிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே தொழில் தொடங்க முனைவோர் டெல்லியை தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டி வருகின்றன.
வடகிழக்கு மாநிலங்கள்
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் கடைசி 5 இடங்களையே பிடித்துள்ளன.
தொழில் கொள்கை
இந்த ஆய்வுகளின் மூலம் மாநிலங்கள் தொழில் தொடங்குவதற்கு எவ்வாறான அளவுகோளை கையாள்கின்றன மற்றும் எத்தகைய வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கின்றன போன்ற அம்சங்களை தெரிந்து கொள்ள முடிகின்றது என்றும் இதன் அடிப்படையிலேயே தொழில் முனைவோர் அந்தந்த மாநிலங்களில் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்று தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்தார்.