நாட்டின் ஜிடிபி 7.5 சதவிதமாக உயரும்- பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு
2019 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2019ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பொருளாராதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத் தொடரில் உரையாற்றினார்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2018 -19 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
கடந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. வரும் நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டது. ஆனால் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் நேர்மறை மாற்றங்கள் தெரிந்தது.
இரண்டாவது காலாண்டு முடிவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது.
அதேபோல ரிசர்வ் வங்கியும் தனது ஜிடிபி வளர்ச்சி விகித கணிப்பை மாற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைவது என்பது கடினமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிடிபி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.