இனி விரல் நுனியில் இபிஎஃப் செட்டில்மென்ட் - வருகிறது புது செயலி 'உமாங்'
தொழிலாளர் வைப்பு நிதியை எடுப்பதற்கான எளிய புதிய செயலி ஒன்றை வெகு விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதியை எடுப்பதற்கான எளிய புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை வெகு விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக் சபாவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கிட்டத்தட்ட நான்கு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், தங்களின் வைப்பு நிதியை ஆத்திர அவசரத்திற்கு எடுக்க முடியவில்லை.
இதற்குத் தேவையான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு மாதக் கணக்கில் அலையாய் அலைகின்றனர். அப்படி அலைந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்முடைய பணம் நம் கைக்கு வந்துவிடுவதில்லை.
புதிய செயலி உமாங்
தொழிலாளர்களின் இந்த அவஸ்தைகளை கருத்தில் கொண்டு அவர்களின் துயரத்தை போக்குவதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்தது. ஆம், அவர்கள் தங்களின் கணக்கில் உள்ள பணத்தை இருந்த இடத்தில் இருந்தே மின்னணு பரிவர்த்தனையின் மூலம் எடுக்க உமாங் எனப்படும் (UMANG) புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளனர்.
பண்டாரு தத்தாத்ரேயா
இது பற்றி லோக்சபாவில் எழுத்து மூலம் பதில் அளித்த பண்டாரு தத்தாத்ரேயா, "தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய பணத்தை மின்னணு பரிவர்த்தனையின் மூலம் எளிய முறையில் எடுப்பதற்காக தொழிலாளர் சேமநல நிதி அமைப்பானது புதிய ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாட்டு அமைப்பு (UNITED MOBILE APPS FOR NEW-AGE GOVERNANCE) என்ற மொபைல் ஆப்ஸை உருவாக்கி உள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. வெகுவிரைவில் இது பயன்பாட்டிற்கு வந்துவிடும்" என்று உறுதியளித்தார்.
விரைவு நடவடிக்கை
இது பற்றி கருத்து கூறிய தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர், எங்களின் 100க்கும் பிராந்திய அலுவலகங்கள் நவீன தொழில்நுட்ப உதவியின் மூலம் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் விண்ணப்பங்களை அதிவிரைவாக பூர்த்தி செய்ய முடியும் என்றார்.
மின்னணு பரிவர்த்தனை
கடந்த பிப்ரவரி மாதம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த தொழிலாளர் நலத்துறை ஆணையர், "எங்களின் அனைத்து அலுவலகங்களையும் மத்திய அலுவலுகத்துடன் இணைக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் முடிந்துவிடும். அதன் பின்பு வரும் மே மாதத்தில் இருந்து அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு பரிவர்த்தனையின் மூலம் சமர்ப்பிக்கவும், பணத்தை எடுக்கவும் வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
பணம் செட்டில்மெண்ட் ஈசி
தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் லட்சியமே, தொழிலாளர்கள் விண்ணப்பித்த சில மணி நேரங்களில் தங்களின் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தொழிலாளர்கள் தாங்கள் விண்ணப்பித்த மூன்று மணி நேரத்திற்குள் தங்களின் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.