தொழிலாளர் வைப்பு நிதி உள்ள 11 கோடி பேருக்கு அப்பா பெயர், பிறந்த தேதி இல்லை
தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப் கணக்கில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களில் சுமார் 11 கோடி சந்தாதாரர்களின் கணக்கு ஆவணங்களில் தந்தையின் பெயர் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளது.
டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப் கணக்கில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களில் சுமார் 11 கோடி சந்தாதாரர்களின் கணக்கு ஆவணங்களில் தந்தையின் பெயர் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளதாக இபிஎப் ஆணையம் தெரிவித்துள்ளது.
இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 1952ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தொடங்கப்பட்டது, இபிஎப்ஓ ஆணையத்தில் இதுவரையிலும் சுமார் 19 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் ஐந்து கோடி சந்தாதாரர்கள் தற்போது இபிஎப்ஓ வில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இபிஎப்ஓ ஆணையத்தில் இருந்து இதுவரையிலும் சுமார் பத்து கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் ஏற்கனவே வேலையில் இருந்து ஓய்வு பெற்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.
தற்போது இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கேற்ப இபிஎப்ஓ ஆணையமும் இபிஎப்ஓ இணையதளத்தை சந்தாதாரர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இபிஎப்ஓ ஆணையம், புதிதாக மொபைல் செயலியை (EPFO Mobile Apps) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருப்பில் உள்ள தொகையை அவ்வப்போது சரிபார்த்துக் கொளள முடியும்.
இபிஎப்ஓவில் சந்தாதார் ஆவதற்கு முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவேண்டியது அவசியமாகும். முறையான ஆவணங்கள் இல்லை என்றால் பின்னர், சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருப்பில் உள்ள தொகையை தேவைப்படும்போது எடுப்பது என்பது சிரமமாகும். குறிப்பாக சந்தாதார்களின் பிறந்த தேதி, தந்தை பெயர் மற்றும் தாயார் பெயரை கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது மிக அவசியம்.
சில ஒப்பந்த வேலையில் (Contract Labour) ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களும் தனிநபர்ளும், தங்களிடம் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் இபிஎப் பணத்தை தொழிலாளர்களின் பெயரில் கணக்கை ஆரம்பித்து அதில் போட்டுவிடுவதும் உண்டு. அப்படி போட்டு வைத்துள்ள பணத்தை பின்னர் திரும்ப எடுப்பது சிரமமான காரியமாகும்.
இபிஎப்ஓ ஆணையம் தெரிவித்துள்ள தற்போதைய தகவலின் படி, சுமார் 11.07 கோடி சந்தாதாரர்களின் கணக்கில் தங்களின் தந்தையின் பெயரை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். அதுபோக, சுமார் 8.38 கோடி சந்தாதாரர்கள் தங்களின் பிறந்த தேதியை குறிப்பிட மறந்துவிட்டனர்.
மேலும், சுமார் 7.83 கோடி சந்தாதாரர்கள் தாங்கள் வேலையில் சேர்ந்த தேதியை குறிப்பிடாமல் விட்டுவிட்டனர். எனவே தங்களின் அடிப்படை தகவல்களை இபிஎப்ஓ இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் பின்னாளில் தங்கள் கணக்கில் இருப்பில் உள்ள பணத்தை எடுப்பது சிரமமாகும்.