பிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: 2017-18ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்தில் இருந்து 8.55 சதவிகிதமாக இபிஎஃப் ஆணையம் குறைத்துள்ளது.
மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் தங்களின் 60 வயதுக்கு பின்பு, முதுமைக் காலத்தை எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவே இபிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை சேமித்து வைக்க விரும்புகின்றனர்.
இபிஎஃப் திட்டத்தில் சேமித்து வைத்தால் வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற உறுதியில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணத்தை சேமித்து வைக்கின்றனர்.
இபிஎஃப் சேமிப்பு
ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவிகிதமும் (Employee's Contribution) நிறுவனத்தின் பங்காக (Employer's Contribution) 12 சதவிகிதமும் பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைக்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவிகிதமுடன் நிறுவனத்தின் பங்காக செலுத்தப்பட்ட 12 சதவிகிதத்தில் இருந்து 3.67 சதவிகிதமும் சேர்ந்து 15.67 சதவிகிதம் இபிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும்.
ஓய்வூதியம்
நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்ட 12 சதவிகிதத்தில் மீதம் உள்ள 8.33 சதவிகிதம் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்கப்படும். இந்தத் தொகையை 58 வயதைக் கடந்த பின்பே ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு கிடைக்கும்.
12 சதவிகிதம் வட்டி
ஊழியர்களிடம் இருந்தும் நிறுவன பங்களிப்பாக அளிக்கப்பட்ட 3.67 சதவிகிதமும் சேர்ந்த 15.67 சதவிகித இபிஎஃப் தொகைக்கே ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்படுகிறது. இபிஎஃப் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1952-53ம் நிதியாண்டில் (மார்ச் முதல் பிப்ரவரி வரை) இபிஎஃப் திட்டத்திற்கு வட்டி விகிதமானது 3 சதவிகிமாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 1989-90ம் நிதியாண்டிலிருந்து 1999-2000 ஆண்டு வரையிலும் 12 சதவிகிதம் வட்டி அளிக்கப்பட்டு வந்தது.
மாறும் வட்டி விகிதம்
இபிஎஃப் திட்டத்தில் சேமிக்கப்படும் வைப்புத் தொகைக்கு அளிக்கப்படும் வட்டிவிகிமானது பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த 2015-16ம் நிதியாண்டில் 8.80 சதவிகிமாகவும், பின்னர் கடந்த 2016-17ம் ஆண்டில் 8.65 சதவிகிதமாக இருந்தது. தற்போது அதுவும் குறைக்கப்பட்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வட்டி விகிதமானது 8.55 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) அளிக்கப்படும் வட்டி விகிதத்தை 2017-18ம் நிதியாண்டிற்கு 8.55 சதவிகிதமாக குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. வட்டி விகிதத்தை குறைக்கக்கூடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்தபோதிலும், இபிஎஃப் ஆணையம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு
கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வைக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 44000 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் வர்த்தக பரிமாற்ற நிதித் திட்டத்தில் (Exchange Traded Fund-ETF) முதலீடு செய்துள்ளது. இதில் சுமார் 886 கோடி ரூபாய் முதலீட்டை விற்ற வகையில் சுமார் 1054 கோடி வரையிலும் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த லாபத் தொகையிலிருந்து வட்டி விகிதத்தை மாற்றாமல் பழைய 8.65 சதவிகித்தை வழங்க முடியும். ஆனால் வட்டி விகிதத்தை மறுபடியும் குறைத்துள்ளது இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளது.