வங்கி ஆவணங்களில் “தில்லுமுல்லு” – ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடாவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம்
டெல்லி: வங்கிக்கான ஆவணங்களை சரிவர பராமரித்து வராத ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடாவுக்கு முறையே 50 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
வாடிக்கையாளர் விவரப் பதிவு விதிகளை சரிவர பின்பற்றாத காரணத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மோசடிக்காரர்கள் புகழ்பெற்ற அரசு சார்புள்ள நிறுவனம் ஒன்றின் பெயரில் போலியான கணக்குகளை இந்த வங்கிகளில் தொடங்கியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கே. ஒய். சி எனப்படும் வாடிக்கையாளர் விவரம் பதியும் நடைமுறைகளை சரிவர பின்பற்றியிருந்தால் இந்த தவறு நேர்ந்திருக்காது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதே புகாருக்குள்ளான பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் பட்டியாலா ஆகிய வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை இந்த மோசடி, வங்கிகளுக்குத் தெரியாமலே நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.