இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 27% அதிகரிப்பு - 27.82 பில்லியன் டாலர் முதலீடு குவிந்தது
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு கடந்த 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 27சதவிகிதம் அதிகரித்து 27.82 பில்லியன் டாலர் முதலீடாகக் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 23 சதவிகிதம் அதிகரித்து 55.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. எனவே இந்த நிதியாண்டில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீடுகளில் நிலவிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் மத்திய நிதியமைச்சர் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த போது குறிப்பிட்டார்.
அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களின் பயனாக முதலீடு 2015-16-ம் நிதி ஆண்டில் அதிகரித்துள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2015 -16 நிதியாண்டின் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 21.87 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் நடந்து முடிந்த 2016-17 நிதியாண்டின் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் இந்தியா பெற்றுள்ள அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 27 சதவிகிதம் உயர்ந்து 27.82 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்தியாவின் சேவைகள் துறை, தொலைத் தொடர்பு, வர்த்தகம்,ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் அதிகளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதேபோல, சிங்கப்பூர், மொரீசியஸ், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.
அந்நிய முதலீடு அதிகரித்தால் டாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதோடு, இந்தியாவில் பணப்பிரச்னை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990களில் முதன் முதலில் இந்தியாவில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது கட்டுமானத்துறை, தொலைத் தொடர்புத் துறை மற்றும் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. 1991ன் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது தகவல் தொழில்நுட்பத் துறையும் இந்த நேரடி அந்நிய முதலீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1991 துவக்கத்தில் 400 கோடிக்கும் குறைவான வருவாயை ஈட்டித் தந்த இந்த அந்நிய நேரடி முதலீடு கடந்த 2010ல் 2000 கோடியாக வளர்ந்தது பின் 13% வளர்ச்சியுடன் 2011ல் சுமார் 2300 கோடியைத் தொட்டது. இதில் தொலைத் தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய பங்காற்றியுள்ளது எனலாம்.
சில்லரை வர்த்தகத்தை பொறுத்தவரை சிங்கிள் பிராண்டில் தொழில் செய்ய 100% என்றும் பல பெயரில் மல்ட்டி பிராண்டில் தொழில் செய்ய 51% அனுமதிக்கவும் தீர்மானித்துள்ளது மத்திய அரசு. அது மட்டுமின்றி பல பெயரில் தொழில் செய்பவர்களை அனுமதிக்கும் பெறுப்பை மாநில அரசுகளின் அதிகாரத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்படி எந்த மாநிலமும் தமது விருப்பத்திற்கு அதை நறைப்படுத்தலாம் அல்லது நடைமுறைப்படுத்தாமலும் இருக்கலாம். தமிழக அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.