ரொக்க பண பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பு ரூ 2 லட்சமாக குறைப்பு - அதிருப்தியில் மக்கள்
ரொக்கப் பணபரிமாற்றத்திற்கான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பை 3 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகக் குறைத்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கள்ள பொருளாதாரத்தையும் கறுப்புப் பொருளாதாரத்தையும் ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன. இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலேயே புழக்கத்திற்கு விடப்பட்டதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மின்னனு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மின்னனு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கப் பரிசுகளையும் அளித்துவருகிறது.
அருண் ஜெட்லி
ரொக்கப் பணப் பரிவர்த்தனையை குறைக்கும் விதமாக, கடந்த பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதாவது "ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 லட்சம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும், அதற்கு மேல் மேற்கொள்ளும் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று அறிவித்தார்.
உச்சவரம்பு ரூ. 2 லட்சம்
இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதி மசோதாவை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
முன்னதாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பை 3 லட்சமாக குறைத்து உத்தரவிட்டு இருந்தது இப்போது ரொக்கப் பணபரிமாற்றத்திற்கான உச்சவரம்பு ரூ.3 லட்டசத்திலிருந்து, ரூ.2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நிதி மசோதாவில் திருத்தம்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரூ.3 லட்சம் வரை ரொக்கப் பரிமாற்றத்திற்கு தடையேதும் இல்லை என அறிவித்தார். ரூ.3 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமற்ற பரிமாற்றமாக செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா தனது ட்வி்ட்டர் பக்கத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரொக்க பணபரிமாற்றத்திற்கு அபராதம்
சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதை தடுக்க கடுமையான சட்டவிதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ள வருவாய்துறை செயலர், பணம் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கான வரம்பு குறித்த எந்த ஒரு பரிந்துரையும் இல்லை. ஆனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணபரிமாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கப் பணிபரிமாற்றத்திற்கு அதே அளவிலான அபராதம் வசூலிக்கப்படும் என அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி
இது மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ரொக்க பணம் பரிமாற்றத்திற்கான உச்சவரம்பு தற்போது ரூ.2 லட்சமாக குறைத்துள்ளது. சிறு, குறு, நடுத்தர பின்னலாடை உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கும். சிறு வணிகர்கள் ஏற்கனவே நொடிந்து போய் உள்ள நிலையில் பணபரிமாற்றத்திற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.