ஜிஎஸ்டி வரி ரிட்டன் தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாள் - டிச.31 வரை நீட்டிக்க கோரிக்கை
ஜிஎஸ்டி வரி ரிட்டன்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டனை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 25ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து அக்டோபர் 21ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து ஐம்பது சதவிகித்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தாங்களாகவே மாதந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி ஆகியவற்றை முறையே ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2, மற்றும் ஜிஎஸ்டிஆர் 3பி ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அனேக வர்த்தகர்களும் தொழில் துறையினரும், ஒருவித நிர்பந்தத்தின் காரணமாகவே அவசர கோலத்தில் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-2பி படிவங்களை இணையதளத்தில் தாக்கல் செய்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு, மாதாந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி செலுத்துவதற்கான படிவங்கள் மூன்று விதமாக இருந்து வருகிறது. இந்த மூன்று விதமான படிவங்களையும் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்துகொண்டு, மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன்பாடு மற்றம் நிகர வரி ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டனை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 25ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து அக்டோபர் 21ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நீட்டிப்பு காலம் வரையில் 2017 ஜூலைக்கும் 2018 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்திற்கான உள்ளீட்டு வரிக் கடன்களை தொழில் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பையடுத்து, வர்த்தகர்களுக்கான தொழிற்துறை அமைப்பான அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் எழுந்துள்ள சில தொழில்நுட்பக் கோளாறுகளால், செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி விற்பனை ரிட்டனை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு இந்தக் கடிதத்தில் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கடிதத்தில், ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால் டீலர்களும், ஆலோசகர்களும் செப்டம்பர் மாதத்துக்கான ரிட்டனை தாக்கல் செய்ய முடியவில்லை என்று அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். தொழில் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.